பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் மூன்றாவது டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த நிலையில் காபா கிரிக்கெட் மைதானத்தில் சிராஜ் பந்து வீச வந்தபோது மைதானத்தில் திரண்டு இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருக்கு எதிராக குரலை எழுப்பினர். மேலும் சிராஜை கிண்டல் செய்யும் விதமாக பல வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினர்.

எனினும் சிராஜ் அது குறித்து கண்டு கொள்ளவில்லை. டிராவிஸ் ஹெட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சிராஜை ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், சிராஜ் ஹெட் விவகாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது.
இதற்காக ஐசிசி இருவருக்கும் தண்டனை வழங்கி விட்டது. இன்னும் சொல்லப்போனால் அந்த விவகாரத்தில் சிராஜ் மீது பெரிய தவறே இல்லை. ஒருவர் தங்களுடைய பந்துவீச்சை சுக்கு நூறாக அடிக்கும் போது அவரை அவுட் ஆக்கினால் யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்வார்கள்.
இதில் யார் முதலில் யாரை திட்டியது என்று விவாதம் எப்போதும் முடிவுக்கே வராது. வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதுமே களத்தில் ஆக்ரோஷமாகத்தான் செயல்படுவார்கள். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தங்களுடைய இயல்புகளை களத்தில் மறைத்து செயல்படுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.
எனினும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இருக்கும் சில சன்னியாசிகள் சிராஜை தொடர்ந்து தாக்கி வருவதை பார்க்க முடிகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள் களத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சிராஜின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய ரசிகர்களை மேலும் கோபமடைய செய்திருக்கிறது. ஆனால் இதே ஆஸ்திரேலிய பவுலர்கள் இங்கிலாந்து வீரரை அவுட்டாக்கிவிட்டு இப்படி கத்தினால் ஆஸ்திரேலிய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அதனை பாராட்டுவார்கள்.
நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே இரவு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். கடும் போட்டி ஏற்படும் போது இது போன்ற விஷயங்கள் களத்தில் நடக்க செய்யும். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் பேட் அல்லது பந்தால் மட்டும் தான் செய்ய வேண்டும்.கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.