திருவனந்தபுரம் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் போட்ட திட்டத்தை முறியடித்தார் அக்சர் பட்டேல்.
முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜம்பாவிற்கு அணியில் இடம் அளிக்கப்பட்டது. இவர்களை வைத்தாவது இளம் வீரர்கள் மட்டுமே கொண்டு ஆடும் அனுபவம் அற்ற இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என ஆஸ்திரேலியா கனவு கண்டது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ரன் குவித்தனர். ஜெய்ஸ்வால் 53, ருதுராஜ் கெயிக்வாட் 58, இஷான் கிஷன் 52, ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.
236 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் மேத்யூ ஷார்ட் 19, கடந்த போட்டியில் சதம் அடித்த ஜோஷ் இங்லிஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 39 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார். பொதுவாக அவர் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் தான் பேட்டிங் இறங்குவார்.
ஆனால், இந்த முறை நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்கினார். மேக்ஸ்வெல் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனி ஆளாக நின்று ஆடி 201 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தது போல இப்போதும் செய்து விடலாம் என தப்புக் கணக்கு போட்டு வந்தார்.
மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்பட்ட அவர் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து இருந்த நிலையில், அக்சர் பட்டேல் பந்துவீச்சில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். மேக்ஸ்வெல் ஆசையை அக்சர் பட்டேல் சிறப்பான ஸ்பின் பவுலிங் வீசி முறியடித்தார்.
இந்திய அணியை வீழ்த்த பெரிய கனவோடு வந்த மேக்ஸ்வெல் 8 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி ஆட்டம் ஆடி ஸ்டோனிஸ் 45, டிம் டேவிட் 37 ரன்கள் எடுத்த போதும் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை வரிசையாக இழந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.