மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தன்னை விமர்சித்து வருபவர்களை பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட நாய்கள் என சூசகமாக கூறி இருக்கிறார். சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் விமர்சித்து இருந்தார் ஹர்பஜன் சிங்.
இந்திய அணியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மட்டும்தான் இடம் அளிக்க வேண்டும், மதிப்பின் அடிப்படையிலும், சூப்பர் ஸ்டார் வீரர்கள் என்ற அடிப்படையிலும் இனி அணியில் தேர்வு செய்யக்கூடாது என கூறி இருந்தார் ஹர்பஜன் சிங். இதை அடுத்து சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை திட்டி வருகின்றனர்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் ஹர்பஜன் சிங். அதில், "சந்தையில் ஒரு யானை நடந்து செல்லும் போது பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட நாய்கள் குரைக்கும்." எனக் கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பணம் கொடுத்து பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஹர்பஜன் சிங் அதைத்தான் இவ்வாறு சூசகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் என கூறப்படுகிறது. அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை நீக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். வீரர்களை மதிப்பின் அடிப்படையில் தான் தேர்வு செய்வீர்கள் என்றால் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்கும் போது கபில் தேவ் மற்றும் அனில் கும்ப்ளேவை இந்திய அணியில் தேர்வு செய்து அழைத்துச் செல்லுங்கள் எனவும் அவர் கூறி இருந்தார்.
அவரது கடுமையான விமர்சனம் பெருமளவில் கவனம் பெற்றது. இதன் பின்னணியில்தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் என்ற போர்வையில் பலரும் அவரை திட்டி வருகின்றனர். அவை அனைத்தும் பணம் கொடுத்து உருவாக்கப்பட்ட பதிவுகள் என தற்போது ஹர்பஜன் சிங் சூசகமாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.