பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு பும்ரா இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் முதல் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக இருப்பார். அடுத்த நான்கு போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்டு உள்ளது.
அவர் முதல் போட்டியின் போது விடுப்பில் இருக்க முடிவு செய்துள்ளதால் பும்ரா தற்காலிக கேப்டனாகி இருக்கிறார். ஆனால், இதில் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக பங்கேற்கவில்லை என்றால், பும்ரா இந்த தொடர் முழுவதற்கும் கேப்டனாக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருந்தார்.

அது பற்றி பேசிய ஹர்பஜன் சிங் ரசிகர்கள் மனநிலையை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தார். ஒரு தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தால் உடனே கேப்டனை மாற்ற வேண்டும் என்பார்கள் என அவர் கூறி இருக்கிறார். இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "பும்ரா தலைமையில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்த தொடர் முழுவதற்கும் அவரே கேப்டனாக இருக்க வேண்டும் என அனைத்து இந்தியர்களும் சொல்வார்கள்." என்றார்.
மேலும், "ஒருவேளை இந்திய அணி பும்ரா தலைமையில் தோல்வி அடைந்தால், ரோஹித் சர்மா உடனே அணிக்கு திரும்ப வேண்டும் என்பார்கள். நாம் மிக விரைவாக நமது முடிவுகளை மாற்றிக் கொள்வோம். நான் சுனில் கவாஸ்கர் சொன்னதைப் பற்றி சொல்லவில்லை. பொதுமக்களை பற்றி சொல்கிறேன். சுனில் கவாஸ்கர் சொன்னது போல ஒரு டெஸ்ட் தொடர் முழுவதும் ஒரே கேப்டனை நாம் நியமிக்கலாம். அதுவும் சிறந்த முடிவு தான்." என்றார்.
மேலும், "இந்தியா தோல்வி அடைந்தால் அப்போது அந்த முடிவை பற்றி யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஒருவேளை பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று, அதன் பின்பு ரோஹித் சர்மா கேப்டன் ஆக வந்த பின் இந்திய அணி தோல்வி அடைந்தால் முற்றிலும் வேறு மாதிரியான சூழ்நிலை நிலவும். அதேபோல, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இருவரின் தலைமையிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால், விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்." என்று கூறி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.