அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாகவே மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் தேர்வு செய்து இருப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.
இந்திய அணியில் ஹர்பஜன் சிங் இடத்தை பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது உலகின் சிறந்த டெஸ்ட் சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அஸ்வின், ஒட்டுமொத்தமாக 800க்கும் அதிகமான சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வினுக்கு 38 வயது ஆகும் நிலையில், அவர் விரைவில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தரை மாற்று வீரராக இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து உள்ளது எனவும், அதற்காகவே அவரை ஒவ்வொரு தொடரிலும் உடன் அழைத்துச் செல்கிறது எனவும் ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "நீண்ட கால அடிப்படையில் வாஷிங்டன் சுந்தரை தான் இந்திய அணி நிர்வாகம் அடுத்த முதன்மை சுழற் பந்துவீச்சாளராக தேர்வு செய்துள்ளது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்காக தனது கேரியரில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஆனால், அவருக்கு 38 வயது ஆகும் நிலையில் அவர் தனது இறுதிக் கட்டத்தில் இருக்கிறார்." என்றார்,
மேலும், "எப்போது அஸ்வின் ஓய்வு பெறுகிறாரோ அப்போது வாஷிங்டன் சுந்தர் அணியில் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இடம் பெறுவார். அதற்காகவே அவரை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்து வருகிறது." என்றார் ஹர்பஜன் சிங்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முதல் பணியே இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு மாற்றாக சரியான வீரர்களை அடையாளம் காண்பது தான். அஸ்வின் மட்டும் அல்லாமல் அடுத்து ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் வாய்ப்பு உள்ளது.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்று வீரரையும், இந்திய அணிக்கு சரியான தலைமையையும் அடையாளம் காண வேண்டிய முக்கிய பொறுப்பு பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு உள்ளது. அவர் வாஷிங்டன் சுந்தரை டெஸ்ட் அணியின் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக, அஸ்வினுக்கு சரியான மாற்றாக இருப்பார் எனக்கு கருதுவதாக ஹர்பஜன் சிங் சுட்டிக் காட்டி இருக்கிறார்.