மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நீண்ட இடைவெளிக்கு பின் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரெட் பாலில் பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வந்த அவர், ரஞ்சி சீசனில் களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர், அடுத்த கேப்டனாக உயர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வரவால், டி20 கேப்டன்சி சூர்யகுமார் யாதவ் கைகளுக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை ஃபிட்னஸில் கவனம் செலுத்துமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

பின்னர் புதிய காதலியுடன் க்ரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வந்த ஹர்திக் பாண்டியா, இம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா திரும்பினார். இதன்பின் உடனடியாக ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியது. அவரும் ரெட் பாலில் பவுலிங் செய்வதை இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக புகைப்படங்கள் மூலம் அறிவித்திருந்தார்.
இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. ஏனென்றால் 2018ஆம் ஆண்டுக்கு பின் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வரவில்லை. அவரின் உடல்நிலை மற்றும் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் பிசிசிஐ தரப்பிலும் ஹர்திக் பாண்டியாவை எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய அணி ஹோம் சீசனை தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் துலீப் டிராபி தொடர் முடிவடைந்து, ரஞ்சி டிராபி சீசன் தொடங்கவுள்ளது. இதற்காக உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தயாராகி வரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவும் பரோடா அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக தான் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக ரெட் பாலில் பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா ரஞ்சி டிராபி தொடர்களில் விளையாடி ஃபிட்னஸை நிரூபிக்கும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் க்ரீன் மற்றும் மிட்சல் மார்ஷ் என்று இரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். அதற்கு நிகராக ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்க்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் வரும் நாட்களில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒருவேளை ஹர்திக் பாண்டியாவால் ஃபிட்னஸை நிரூபிக்க முடியாத பட்சத்தில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்றே பார்க்கப்படுகிறது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றதை போல் இம்முறையும் பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்று 6+2+3 என்ற கூட்டணியில் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.