அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் பவுலரான ஹர்சித் ராணா வீசிய 3 ஓவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சுப்மன் கில் கேப்டனான முதல் ஒருநாள் தொடரிலேயே தோல்வி அடைய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் அரைசதம் விளாசினார்கள். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சவாலான இலக்கை நிர்ணயித்த போதும், பவுலிங்கில் சில சொதப்பலை செய்துள்ளது.
குறிப்பாக ஹர்சித் ராணாவின் பவுலிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் 8 ஓவர்களை வீசிய ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 59 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். 35 ஓவர்கள் வரை இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம், ஹர்சித் ராணா வீசிய 3 ஓவர்களில் மாற்றம் அடைந்தது.
36, 38 மற்றும் 40 ஆகிய ஓவர்களை வீசிய ஹர்சித் ராணா, ஒரு விக்கெட்டை வீழ்த்தி 35 ரன்களை விட்டுக் கொடுத்தார். அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணி 6 ரன்களுக்கு மேல் ஒவ்வொரு ஓவரிலும் அடிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் ஹர்சித் ராணா விட்டுக் கொடுத்த சிக்ஸ், பவுண்டரி காரணமாக, ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கைகள் ஓங்கியது.
ஹர்சித் ராணா ஒரு நல்ல பந்தை வீசினால், அடுத்தடுத்து 3 மோசமான பந்துகளை வீசுவதே இதற்கு முக்கியக் காரணம். டி20 கிரிக்கெட்டை போல் விக்கெட்டை மட்டும் எடுக்காமல், ரன்களை கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ராணாவுக்கு என்ன லைன் மற்றும் லெந்தில் வீசினால் ரன்களை கட்டுப்படுத்தலாம் என்பதே புரியாமல் செயல்படுவது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி இருக்கிறது.