சிட்னி: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் காயம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதி செய்துள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டையொட்டி நேற்று பயிற்சி மேற்கொள்ளாத சூழலில், இன்று காலை விரைவாகவே பயிற்சியை தொடங்கினர். இதன்பின் சிட்னி பிட்சை ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் கம்பீர் உள்ளிட்ட மூவரும் பார்த்தனர்.

சிட்னி பிட்சை பொறுத்தவரை ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தாலும், கடைசி 2 நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை வரும் பட்சத்தில் ஸ்பின்னர்கள் தேவை இருக்காது. இதனால் இந்திய அணி 2 ஸ்பின்னரளுடன் களமிறங்குவது சந்தேகம் என்றே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சிட்னி பிட்சை இப்போது தான் பார்த்திருக்கிறோம். இதனால் பிட்சிற்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்து பிளேயிங் லெவனை நாளை அறிவிப்போம். ஆகாஷ் தீப் காயமடைந்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய ஆட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று உறுதி செய்திருக்கிறார்.
இதனால் ஆகாஷ் தீப் இடத்தில் எந்த வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ராணா வாய்ப்பை பெற்றார். அதன்பின் கடந்த 2 போட்டிகளில் ஆடிய ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். அவரது பவுலிங்கில் கொடுக்கப்பட்ட ஏராளமான கேட்சை இந்திய ஃபீல்டர்கள் கோட்டைவிட்டனர்.
இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணாவை பொறுத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தாலும், அவர் சொல்லிக் கொள்ளும்படி இன்னும் முழுமையாக திறமையை வெளிப்படுத்தவில்லை.
ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார். அவரும் முகேஷ் குமாரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். இதனால் முதல் சில போட்டிகளிலேயே பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. மெக்ராத் போன்ற ஜாம்பவான்கள் கூட பிரசித் கிருஷ்ணாவை பாராட்டி இருப்பதால், கடைசி ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்பு உள்ளதாக விவாதம் நடந்து வருகிறது.