பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரில் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவது உறுதியாகி இருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் செல்லப் பிள்ளை என்பதால் தான் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அவர் இதுவரை ஒட்டுமொத்தமாக உள்ளூர் அளவில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகள் என மொத்தமாக 50 போட்டிகளில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அனுபவம் இல்லாத அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் தேர்வு செய்த போதே இந்த கேள்வி இருந்தது. தற்போது அவரை பிளேயிங் லெவனிலும் ஆட வைப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அந்த அணி கோப்பை வென்றதில் அவருக்கும் முக்கிய பங்கு இருந்தது. அதே ஆண்டு கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார். அப்போது ஹர்ஷித் ராணா மீது கம்பீருக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. அதனாலேயே ஹர்ஷித் ராணா இந்திய டெஸ்ட் அணியில் மிக குறுகிய காலத்தில் இடம் பெற்று இருக்கிறார் என்ற பேச்சு உள்ளது.
ஹர்ஷித் ராணா இதுவரை 10 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அந்தப் போட்டிகளில் 469 ரன்களும் குவித்து இருக்கிறார். ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்து இருக்கிறார். பேட்டிங்கிலும் ஓரளவுக்கு கை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்ய உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தியா ஏ அணியுடன், இந்திய அணி ஆடிய பயற்சிப் போட்டியில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதிக பவுன்ஸ் பந்துகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.