பிரிஸ்பேன்: பெர்த் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியுடன் இணைந்த போதே அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து அறிந்து கொண்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கம்பீர் மற்றும் நான் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாட அஸ்வினை ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். காபா டெஸ்ட் முடிவடைந்த பின் சக வீரர்களுடன் ஓய்வு முடிவை பகிர்ந்து கொண்ட அஸ்வின், இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் கடைசி நாள் என்றும் தெரிவித்தார்.

287 சர்வதேச போட்டிகள், 4,394 ரன்கள், 765 விக்கெட்டுகள் என்று அஸ்வினின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை என்று ஐசிசி கோப்பைகளையும் அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்வின் தொடக்கத்திலேயே வென்று சாதனை புரிந்தவர். இதனால் அஸ்வினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வினின் ஓய்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், பெர்த் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியுடன் இணைந்த போதே அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து அறிந்து கொண்டேன். ஓய்வு முடிவை எடுப்பதற்கு முன்பாக ஏராளமான விஷயங்கள் குறித்து அவர் சிந்தித்திருப்பார். அதேபோல் இந்திய அணியின் சிந்தனை, என்ன காம்பினேஷன் தேவை என்பதையும் அறிவார்.
அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் எந்த ஸ்பின்னருடன் களமிறங்குவோம் என்பதிலும் குழப்பம் இருந்தது. பெர்த் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியுடன் இணைந்த பின்னரும், ஸ்பின்னர்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாட அஸ்வினை ஒப்புக் கொள்ள வைத்தோம். இந்திய அணிக்கு அவர் தேவையில்லை என்று கருதினால், நான் ஓய்வு பெறுவதே சரி என்று முடிவு எடுத்துள்ளார்.
அஸ்வினின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளை வென்று கொடுத்த மிகச்சிறந்த மேட்ச் வின்னர், இதுபோன்ற முடிவுகளை உடனடியாக எடுப்பதற்கு அத்தனை உரிமைகளும் உள்ளது. நிச்சயம் ரவிச்சந்திரன் அஸ்வினை களத்தில் மிஸ் செய்வோம். எப்போதெல்லாம் விக்கெட் எடுக்க முடியாமல், டாப் ஆர்டர் சரிந்து திணறுகிறோமோ, அப்போதெல்லாம் அஸ்வின் அசத்தியுள்ளார்.
இந்திய அணி வெற்றிக்காக அத்தனையையும் செய்துள்ளார். இந்திய அணிக்காக அவர் செய்யாத விஷயங்கள், சாதனைகள் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் சாதித்திருக்கிறார். அஸ்வினுடன் உ17 கிரிக்கெட்டில் போட்டிகளில் இருந்தே இணைந்து விளையாடி இருக்கிறேன். அப்போது தொடக்க வீரராக அஸ்வின் விளையாடி கொண்டிருந்தார். அதன்பின் திடீரென அஸ்வின் பெயரை கேட்க முடியவில்லை.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்ற செய்திகள் வரும். அப்போது எப்படி ஒரு பேட்ஸ்மேனால், திடீரென பவுலராக மாற முடிந்தது என்ற குழப்பமடைந்தேன். அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் இணைந்து பயணித்து வந்திருக்கிறோம்.
2010ல் இருந்து இணைந்து விளையாடி வருவதால், அவர் இந்திய அணிக்காக என்ன செய்துள்ளார் என்பது நன்றாக அறிவேன். அதனால் அஸ்வினின் சாதனைகளை மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்ல தேவையில்லை. ஆனால் அஸ்வினை போன்ற ஒரு மேட்ச் வின்னரை யாரும் பார்த்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.