மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி எவ்வளவு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்பது தொடர்பான முழு விவரத்தையும் பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களாகவே இந்திய வீரர்களை ஆஸ்திரேலியா மீடியாக்கள் தொடர்ந்து சீண்டி வருகின்றன. முதலில் விராட் கோலியின் அனுமதியின்றி அவரின் குழந்தைகளை படமெடுத்து ஆஸ்திரேலியா மீடியாக்கள் வாக்குவாதம் செய்தனர். அதன்பின் ஜடேஜா இந்தியில் பேசுகிறார் என்று புதிய சர்ச்சையை உருவாக்கினார்கள். தற்போது ஆஸ்திரேலியா மீடியாக்களுக்கு தீனி போடும் வகையில் விராட் கோலி சிக்கியுள்ளார்.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 10வது ஓவர் முடிவடைந்த பின், ஓவர்களுக்கு இடையிலான மாற்றத்திற்காக ஆஸ்திரேலியா வீரர்கள் நடந்தனர். அதேபோல் விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரும் மறுபக்கம் செல்ல நடந்தனர். அப்போது ஆஸ்திரேலியா அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் வேண்டுமென்றே இடித்த விராட் கோலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பின் நடுவர்களும், கவாஜா உள்ளிட்டோரும் இணைந்து சூழலை சரி செய்தனர். இதன் காரணமாக விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. 19 வயதாகும் அறிமுக வீரரை இப்படி ஸ்லெட்ஜிங் செய்யலாமா, நேரடி மோதலில் ஈடுபடலாமா என்று ஆஸ்திரேலியா பத்திரிகைகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நடுவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விராட் கோலி எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. புகார்களை ஒப்புக் கொண்டதால், அவர் எந்த விசாரணைக்கு ஆஜாராக தேவையில்லை என்றும் தெரிய வந்தது.
இதனிடையே போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவிகிதம் என்றால், விராட் கோலிக்கான அபராத தொகை எவ்வளவு என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிசிசிஐ-ன் ஏ+ ஒப்பந்தத்தில் விராட் கோலி இருப்பதால், அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம் ஊதியமாக அளிக்கப்படுகிறது. அதில் 20 சதவிகிதம் என்றால், அவருக்கான அபராத தொகை ரூ.3 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால் விராட் கோலி போட்டிக்கான ஊதியமாக ரூ.12 லட்சம் மட்டுமே பெற முடியும். விராட் கோலியின் செயல்பாடுகள் ஐசிசி விதிகளின்படி லெவல் 1 விதிமீறல் என்பதால், அம்பயர்களே அவருக்கான குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். விராட் கோலி நடுவர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றதால், உடனடியாக சுமூகமான சூழல் எட்டப்பட்டுள்ளது.