மும்பை: இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டது எப்படி என்று ரசிகர்களிடையே விவாதம் தொடங்கியுள்ளது. இதற்கு பின் சிஎஸ்கே அணியின் ஆதரவுக் கரம் இருப்பதால், அவர் இந்தியா ஏ அணியின் கேப்டன்சியை பிடித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ருதுராஜ் கெய்க்வாட், தங்கப் பதக்கத்துடன் திரும்பினார். அதன்பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதால், அந்த இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் கொண்டு வரப்பட்டார்.

அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், அவரின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. அண்மையில் நடைபெற்ற துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா சி அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அதன்பின் இராணி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே மகாராஷ்டிரா ரஞ்சி அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், தற்போது இந்தியா ஏ அணியின் கேப்டனாக கொண்டு வரப்பட்டிருக்கிறார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரரான ருதுராஜ் கெய்க்வாட், இதுவரை இந்திய அணிக்காக எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடியதில்லை. இரு முறை இந்திய அணிக்கு தேர்வான போதும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல் துலீப் டிராபி, இராணி கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் பெரிய சதங்களை விளாசவில்லை. தற்போது மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மட்டும் நீண்ட இடைவேளைக்கு பின் சதம் விளாசி ஒரு வழியாக பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் மறுபுறம் அபிமன்யூ ஈஸ்வரன் சதங்கள், இரட்டை சதங்கள் என்று கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வருகிறார்.
ஆனாலும் ஒவ்வொரு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் இந்தியா ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டனாக கொண்டு வரப்படுகிறார். இதனால் சிஎஸ்கே அணியின் ஆதரவுக் கரம் தான் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு காரணமா என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
அவர் கேப்டன்சியில் போதுமான அனுபவம் பெறுவதற்காக தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகிறாரோ என்ற பேச்சுகள் தொடங்கியுள்ளன. அதேபோல் ரஞ்சி டிராபி, இராணி கோப்பை மற்றும் துலீப் டிராபி ஆகியவற்றில் ருதுராஜ் கெய்க்வாட்-ன் கேப்டன்சியும் விமர்சனத்திற்கு உள்ளானது. பவுலர்களை புரிந்து அவர்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல் ருதுராஜ் செயல்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.