பெர்த்: ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 முறை வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் புஜாரா. 2018-19 சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் உட்பட 511 ரன்களையும், 2020-21ல் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உட்பட 272 ரன்களையும் விளாசினார்.
புஜாராவின் பேட்டிங் ஸ்டைல் காரணமாக ஆஸ்திரேலியா பவுலர்கள் விரைவாக சோர்வடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் புஜாராவின் புகைப்படத்தை டீம் மீட்டிங்கில் பார்த்த போது, ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட், ஏற்கனவே களத்தில் புஜாராவை தான் அதிகமாக பார்க்கிறோம். இப்போது ஆலோசனை கூட்டத்திலும் பார்க்கிறோம்.. அவரை எனக்கு பார்க்க பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து அஸ்வின் பேசியது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த முறை புஜாரா இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் ஹேசல்வுட் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனென்றால் களத்தில் அதிக நேரம் பேட்டிங் செய்து எளிதாக எதிரணி பவுலர்களை சோர்வடைய வைத்துவிடுவார். புஜாரா இல்லையென்றாலும், இந்திய அணியின் பேட்டிங் வலிமை குறையவில்லை. இந்திய அணியில் எப்போதும் திறமையான வீரர்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை. சுப்மன் கில் காயம் காரணமாக விலகியதாக அறிகிறேன். இதனால் இந்திய அணியில் டாப் 6 பேட்ஸ்மேன்கள் யார் என்று முடிவு செய்வதில் சிக்கில் வரலாம்.
ஆனால் இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளை போல் இந்திய அணிக்கு வீரர்களின் காயத்தால் சிக்கல் வராது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவிலான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல் விராட் கோலியின் விக்கெட்டை மட்டும் வீழ்த்துவதில் கவனம் செலுத்தப் போவதில்லை. அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவருடன் ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.
அவர்களையும் சமாளிக்க திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை உள்ளது. ரிஷப் பண்ட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு மாற்று திட்டங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் முதல் திட்டம் செயல்படவில்லை என்றால், களத்திலேயே அடுத்த திட்டத்தை உருவாக்குவதற்குள் ஆட்டத்தை மாற்றிவிடுவார்கள். ரிஷப் பண்ட் போல் ஒரே செஷனில் ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர்கள் தான் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ். அப்படியான வீரர்கள் ஆபத்தானவர்கள்.
முகமது ஷமி இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இளம் வீரர்கள் அனைவருக்கும் முகமது ஷமியால் வழிகாட்ட முடியும். இருந்தாலும் ஜஸ்பிரிட் பும்ரா இந்திய பவுலர்களை வழிநடத்தி செல்வார். முகமது ஷமி இல்லையென்றாலும், மாற்று வீரர்களை இந்திய அணி சிறப்பாக தயார் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.