துபாய்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடிக்க முடியவில்லை என்பது தொடர்பாக எந்த கவலையும் இல்லை என்று நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றியே முதன்மையானது என்று கூறிய விராட் கோலி, இந்த பிட்சில் ஓடி எடுத்த ஓவ்வொரு ரன்னும் நிறைவை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்களும், கேஎல் ராகுல் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து அசத்தினர். இதையடுத்து 84 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. இதன்பின் விராட் கோலி பேசுகையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்னிங்ஸை போன்றே இன்றைய இன்னிங்ஸையும் ஆடினேன். இந்த பிட்ச் மற்றும் சூழலை புரிந்து கொண்டு ஸ்ட்ரைக் வேகமாக மாற்றினோம்.
அதேபோல் இதுபோன்ற பிட்ச்களில் பார்ட்னர்ஷிப் உருவாக்குவது முக்கியமானது. எப்போதும் பிட்சை பொறுத்துதான் எனது இன்னிங்ஸை கட்டமைப்பேன். எப்போதும் டைமிங் மற்றும் சமநிலையை தவறவிடாமல், அவசரம் இல்லாமல் ஆடுவேன். இந்த இன்னிங்ஸில் ஓடி எடுத்த ஒவ்வொரு ரன்னும் நிறைவை அளிக்கிறது. கிரிக்கெட்டில் நாக் அவுட் போட்டி என்பது அழுத்தம் நிறைந்தது.
ஒரு கட்டத்தில் ஆட்டத்திற்குள் முழுமையாக சென்ற பின், எதிரணி தரப்பில் சில வாய்ப்புகள் நிச்சயம் அளிக்கப்படும். அதேபோல் நம் மனதை கட்டுப்படுத்தி விளையாட வேண்டும். ஒரு கட்டத்தில் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய சூழல் வந்தாலும், நான் கவலைப்பட மாட்டேன். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் எனது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் ஆட்டமா என்பது தெரியவில்லை.
அதனை நீங்கள்தான் சொல்ல வேண்டும். எப்போதும் சிறந்த இன்னிங்ஸ் அல்லது சாதனைகள் குறித்து கவனம் கொண்டதில்லை. எப்போது சாதனைகளை பற்றி கவலைப்படவில்லை என்றால், அது நம்மை தேடி வரும். நான் சதம் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எனது சதத்தை விடவும் இந்தியாவின் வெற்றி முக்கியமானது. அதனால் சதம் அடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.