சிட்னி: 1940களில் இருந்து 2010 வரை ஆஸ்திரேலியா மண்ணில் ஒருமுறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியாமல் இந்திய அணி தவித்து வந்த நிலையில், அடுத்தடுத்து 2 முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
2018-19 பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 2021-22 பார்டர் கவாஸ்கர் டிராபி என்று இரண்டு கோப்பையையும் 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் நேர்ந்த அவமானத்திற்கு பழீதீர்க்க ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், இப்போதிருந்தே பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இந்திய டெஸ்ட் தொடர் வரை வேறு எந்த போட்டிகளிலும் விளையாட மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது எப்படி என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பேசி இருக்கிறார்.
அதில், சமீப காலங்களில் இந்திய அணி வீரர்கள் அழுத்தம் நிறைந்த தருணங்களில் கொஞ்சம் கூட பயமின்றி ஆடுவதை கவனித்திருக்கிறீர்களா.. அந்த குணமும், வெளிநாட்டு ஆடுகளங்களுக்கு ஏற்ப எளிதாக தகவமைத்து கொள்ளும் திறனும் தான் இந்திய அணியின் பிரம்மாண்ட எழுச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது, காபா மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்று தொடரை கைப்பற்றினார்கள்.
அது சாதாரணமாக நடந்துவிடாது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கண்டறிந்துவிட்டனர். ஒரு காலத்தில் காபா மைதானம், ஓவல் மைதானத்தை கண்டு பயந்தனர். தற்போது அந்த பயம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கு வீரர்களின் தேர்வும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது முக்கிய தருணங்களில் பயமில்லாமல் விளையாட தொடங்கியதும் காரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அதில் இளம் வீரர்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஒன்றை மட்டும் கவனித்து வருகிறேன். ஐபிஎல் போன்ற தொடர், அவர்களுக்கு உலகக்கோப்பை போல் அழுத்தம் நிறைந்த தொடர். அதில் விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன்கள் சேர்க்க கூடிய வீரர்களாகவே உள்ளனர். தோல்வியை பற்றி கொஞ்சம் கூட அவர்களுக்கு பயமில்லை.
அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் திறன் அதிகரித்துள்ளது. யாரையும் நம்பி இந்திய அணியின் பவுலிங் இல்லை. யார் இல்லையென்றாலும் அவர்களின் இடத்திற்கு வரும் வீரர்கள், அதே அளவிற்கான தாக்கத்தை கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்திய அணியின் கேப்டன்சி கூடுதல் வலிமை பெற்றுள்ளது.
விராட் கோலியின் காலத்தில் தான் இது தொடங்கியது என்று கருதுகிறேன். வெற்றிக்கான பசியை கேப்டனாக விராட் கோலி விதைத்தார். அதனை ராகுல் டிராவிட் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளார். விராட் கோலி போன்ற வீரர் அந்த அணிக்குள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். அதேபோல் இந்திய அணியில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் உருவாகிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.