சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. 1940 முதல் 2017 வரை ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வென்றதில்லை. ஆனால் 2018-19 பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 2021-22ல் நடத்தப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை தொடர்ச்சியாக 2 முறை கைப்பற்றி சாதனை படைத்தது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு முறை கூட பார்டர் கவாஸ்கர் கோப்பை மீது ஆஸ்திரேலியா அணியால் கைவைக்க முடியவில்லை. இந்திய அணி தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா அணியில் விளையாடி வரும் ஏராளமான வீரர்கள் ஒரு முறை கூட இந்திய அணியை டெஸ்ட் தொடரிலேயே வீழ்த்தியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் இந்திய அணியை பழிதீர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக 2 மாதங்கள் வரை கேப்டன் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை எதிர்கொள்ள புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த ஓய்வை வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க் பேசுகையில், விராட் கோலிக்கு எதிரான சவாலை சந்திக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் இருவரும் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். எப்போதும் எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு சவாலும், போட்டியும் இருந்து கொண்டே இருக்கும். நான் அவரை ஒரு சில முறை மட்டுமே விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன்.
அதேபோல் விராட் கோலி எனக்கு எதிராக ஏராளமான ரன்களை விளாசி இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி தொடரும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை விராட் கோலியை 4 முறை மிட்சல் ஸ்டார்க் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிராக மட்டுமே விராட் கோலி 236 ரன்களை விளாசி இருக்கிறார். மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிரான விராட் கோலியின் பேட்டிங் சராசரி 59ஆக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள விராட் கோலி 6 சதங்கள் உட்பட 1,352 ரன்களை விளாசி இருக்கிறார். சொந்த மண்ணில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்சல் ஸ்டார்க் 217 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையிலான மோதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இருவருமே சூப்பர்ஸ்டார் வீரர்கள். இருவரையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருவருக்கும் இடையில் மிகச்சிறந்த போட்டி இருக்கும். யார் அதிக ரன்கள் அடிப்பார்கள் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பாக உள்ளது. இருவருக்கும் இடையிலான போட்டி என்பதை காட்டிலும், இந்த தலைமுறையின் 2 சிறந்த வீரர்கள் நேருக்கு நேர் மோதி கொள்ளவுள்ளனர். அதனை பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.