அடிலெய்டு: சிறப்பாக பவுலிங் செய்தீர்கள் என்று பாராட்டியதை இந்திய வீரர் முகமது சிராஜ் தவறாக புரிந்து கொண்டதாக ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். சதம் விளாசிய பின் தனது 2வது மகனுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இதற்கு ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் ட்ராவிஸ் ஹெட்டின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 4 சிக்ஸ், 17 பவுண்டரிகள் உட்பட 140 ரன்கள் எடுத்து அசத்தினார். சதம் விளாசிய பின், ட்ராவிஸ் ஹெட் அதனை தனது மகனுக்கு அர்ப்பணித்து கொண்டாடினார்.

அடிலெய்டு மைதானம் ட்ராவிஸ் ஹெட்டின் சொந்த மைதானம் என்பதால், அவரின் மனைவி ஜெஸ்ஸிகா, மகன் மில்லர் மற்றும் புதிய மகன் உள்ளிட்டோர் மைதானத்தில் இருந்தனர். இதனால் ட்ராவிஸ் ஹெட்டின் ஆட்டம் அவர்களுக்கு பெருமையளிக்கும் வகையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 2 வாரங்களாகவே சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது. அதற்கான பலன் கிடைத்துள்ளது. கடினமான பிட்சாக இருந்தாலும்ன், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து சில ஷாட்களை விளையாடியதால் ரன்கள் சேர்க்க முடிந்தது. அதேபோல் இந்திய அணியின் பவுலிங்கும் மிகச்சிறப்பாக இருந்தது. எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்ததால், ஆஸ்திரேலியா அணியின் முன்னிலையை அதிகரிக்க முடிந்தது.
பெர்த் டெஸ்ட் போட்டிக்கு பின் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம். இந்தப் போட்டியில் எங்கள் மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்று இந்திய அணியும் களமிறங்கியிருக்கும். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போது, யார் சரியான விஷயங்களை செய்கிறார்களோ அவர்களால் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். தற்போது நல்ல நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறந்த தரத்தில் பவுலிங் செய்யும் போது, ஒரேயொரு பவுலர்களை மட்டும் குறி வைத்து அட்டாக் செய்ய முடியும் செய்தேன். அப்போது அஸ்வின் பவுலிங்கில் சில ரிஸ்க் எடுத்து ரன்கள் சேர்த்தேன். சில ஸ்பெல்களை தவிர்க்க வேண்டும் என்று விளையாடினேன். சில பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக ரன்கள் சேர்த்தேன்.
என் முதல் மகன் பிறந்த போது இதேபோல் சதம் விளாசி கொண்டாடினேன். தற்போது 2 வாரங்களுக்கு முன் 2வது மகன் பிறந்தான். அவருக்காக இந்த சதத்தை அர்ப்பணித்து கொண்டாடினேன். சிராஜ் பந்தில் ஆட்டமிழந்த பின், நன்றாக பவுலிங் செய்தீர்கள் என்றே கூறினேன். ஆனால் அதனை சிராஜ் தவறாக புரிந்து கொண்டார். அதற்கு எனது எதிர்வினையை காட்டினேன்.
எனது விக்கெட்டை வீழ்த்திய பின் சிராஜின் கொண்டாட்டத்தை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஆட்டத்தின் சூழலில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. சிராஜின் சைகைகள் ஏமாற்றம் அளித்தாலும், நான் பின் வாங்க மாட்டேன். எனக்காக என்றும் நான் தான் நிற்க வேண்டும். அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் அதுபோல் யாரும் ஆக்ரோஷத்தை வெளியில் காட்ட மாட்டார்கள்.
அப்படியொரு கிரிக்கெட்டை விளையாட எனக்கு விருப்பமில்லை. அந்த தருணத்திற்கு பின் சிராஜை ரசிகர்களும் கிண்டல் செய்தார்கள் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் ரசிகர்களுக்காக நாம் செய்யும் சில விஷயங்கள், அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடும். அதேபோல் இதுபோன்ற உரையாடல்களை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.