அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை பார்த்த போது, 10 ஆண்டுகளுக்கு முன் என்னை நான் பார்ப்பது போலவே இருந்தது என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாளை மறுநாள் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், எளிதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆஸ்திரேலியா அணி இதுவரை நடந்துள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.

அதனால் இந்திய அணி கவனமாக விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியாவின் வலையில் சிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இணைந்தாலும், தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணியே தொடர வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கவுள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் தான் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து முதல்முறையாக விளையாடினேன். அதற்கு முன்பாக நாங்கள் இருவரும் இணைந்து பேட்டிங் செய்ததில்லை. இதனால் பயிற்சியின் போது நாங்கள் இருவரும் சில ஆலோசனைகளை செய்து கொண்டோம்.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய போது கிடைத்த அனுபவங்களை ஜெய்ஸ்வாலுடன் பகிர்ந்து கொண்டேன். அவருடன் களத்தில் பேசி அமைதிபடுத்த முயற்சி செய்தேன். அப்போது 10 ஆண்டுகளுக்கு முன் இதே ஆஸ்திரேலியா மண்ணில் பேட்டிங் செய்த போது நான் எப்படி இருந்தேனோ, அதெபோன்ற நிலையில் தான் ஜெய்ஸ்வால் இருந்தார். என்னை நானே பார்ப்பது போல் இருந்தது.
பிங்க் பாலில் விளையாடுவது எனக்கு இதுவே முதல்முறையாகும். அதனால் பிங்க் பாலில் விளையாடிய அனுபவம் உள்ளவர்களிடம் உரையாடினேன். ரெட் பாலை விடவும் பிங்க் பால் மிகவும் வித்தியாசமாக உள்ளது. பவுலரின் கைகளில் இருந்து பந்து வெளி வரும் போது, எதையும் யூகிக்க முடியவில்லை. அதனால் பயிற்சியில் கவனமாக இருந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.