பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் பேட்டிங் ஆடிய போது, மீண்டும் களமிறங்க தயாராகிவிட்டதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் பும்ராவும், ஆகாஷ் தீப்பும் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்டது ஆச்சரியம் கொடுத்ததாகவும் பாராட்டியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றது வருகிறது. 4வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. இதன் மூலமாக ஃபாலோ ஆனை தவிர்த்து இந்திய அணி டிரா செய்யும் நோக்கில் பயணித்து வருகிறது.

இதற்கு முக்கியமான காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் இருந்துள்ளார். சிறப்பாக பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் 139 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 84 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக 2014ஆம் ஆண்டுக்கு பின் SENA நாடுகளில் அதிகளவில் 80 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய வீரர்களில் கேஎல் ராகுல் முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல் இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்காக 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்றைய ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கேஎல் ராகுல் பேசுகையில், ஓய்வறையில் இருந்த போது மீண்டும் கால்களில் பேடினை அணிந்து பேட்டிங் விளையாட வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருந்தேன். ஆனால் ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன் கொடுக்குமா என்ற சந்தேகமும் இருந்தது.
ஆனால் ஃபாலோ ஆன் கொடுத்தால், பேட்டிங்கின் போது என்ன செய்ய வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால் டெய்லண்டர்கள் முன் நின்று ரன்களை விளாசியது மகிழ்ச்சியாக இருந்தது. இதுகுறித்து இந்திய அணியின் மீட்டிங்கில் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளோம். அதேபோல் பவுலர்களும் வலைப்பயிற்சியில் அதிகமாக பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அதற்கான பலன் கிடைத்துள்ளது.
அழுத்தம் நிறைந்த சூழலில் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளோம். அது இந்தப் போட்டியில் மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துள்ளது. மழை வந்து இன்றைய ஆட்டத்தில் சில விஷயங்கள் சாதகமாக மாறினாலும், நாளைய ஆட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிகளை ஆராய வேண்டும். மேலும், ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இருவரும் சுவாரஸ்யமான ஷாட்களை விளையாடி இருக்கின்றனர்.
கடைசி அரை மணி நேரம் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதோடு, தங்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி பவுன்சர்களை எதிர்கொண்டதாக பாராட்டியுள்ளார். நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு குறைவாக இலக்கு நிர்ணயித்தால், இந்திய அணி வெற்றிபெற முயற்சிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.