சென்னை: இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால் நிச்சயமாக இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்திருக்காது என்று முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். பந்தை தேய்மானம் அடைய வைக்கும் அளவிற்கு கூட சுப்மன் கில் பேட்டிங் ஆடவில்லை என்று கூறிய பத்ரிநாத், அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியிடம் இழந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணியால் முன்னேறும் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. சீனியர் வீரர்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கான வீரர் என்று அறியப்பட்டவர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று பிசிசிஐ நிர்வாகத்தால் முன்னிறுத்தப்பட்ட சுப்மன் கில், ஆஸ்திரேலியா மண்ணில் 3 போட்டிகளில் விளையாடி 93 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதாவது ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார் அடித்த ரன்களை கூட இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஆடிய சுப்மன் கில்லால் அடிக்க முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் வெளிநாடுகளில் ஆடிய ஒரு இன்னிங்ஸில் கூட 40 ரன்களை எட்டவில்லை. இந்திய மண்ணில் மட்டும் ரன்களை அடித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கான வீரர் என்று சில நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசுகையில், இதே சுப்மன் கில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவராக இருந்திருந்தால், நிச்சயமாக இந்திய அணியில் இருந்து சாதாரணமாக நீக்கி இருப்பார்கள். சுப்மன் கில் ஆட்டமிழப்பதை பார்ப்பதற்காக சோகமாக உள்ளது. அந்த அளவிற்கு அவர் பில்டப் கொடுத்ததற்கு ஏற்ப விளையாடவில்லை.
எந்த பேட்ஸ்மேனும் ஆட்டமிழந்து வெளியேறுவார்கள். அது சாதாரண விஷயம் தான். ரன்கள் அடிப்பதும், அடிக்க முடியாமல் போவதும் கிரிக்கெட்டில் சகஜம். ஆனால் களத்தில் எப்படி விளையாடுகிறோம், என்ன மாதிரியான உடல்மொழியை வெளிப்படுத்துகிறோம், என்ன முயற்சிக்கிறோம் என்பது முக்கியம். குறைந்தபட்சம் நம்பர் 3ல் வருவபர் பந்தை தேய்மானம் அடைய வைக்க முயற்சித்திருக்கலாம்.
பவுலர்களை சோர்வடைய வைக்க முயற்சித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அவருக்கு பின் வரும் சக வீரர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். உங்களுக்கு ரன்கள் வரவில்லை என்றாலும் கூட, டிஃபென்ஸ் ஆடி களத்தில் நின்றிருக்க வேண்டும். அதுதான் நம்பர் 3 வீரராக வரும் ஒரு பேட்ஸ்மேனின் பங்களிப்பு. இதனை தான் மார்னஸ் லபுஷேன் செய்து கொடுத்தார்.
ஏன் நேதன் மெக்ஸ்வீனி கூட பந்தை பழையதாக மாற்றவும், பவுலர்களை சோர்வடைய வைக்கவும் முயற்சித்தார். இதுதான் குறைந்தபட்சம் அந்த வீரர்கள் தங்கள் அணிக்கு செய்யும் பங்களிப்பு. ஆனால் சுப்மன் கில் களமிறங்கும் போது பார்ப்பதற்காக அழகாக 2 ஷாட்களை ஆடுகிறார். 4 பேர் தன்னை பற்ற பேச வேண்டும் என்பது போல் நிற்கிறார். கிரிக்கெட் என்பது அப்படி அல்ல.
ஃபீல்டிங்கில் கூட சுப்மன் கில் சரியாக செயல்பட முடியவில்லை. ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்ய முடியவில்லை. பாய்ண்ட், ஷார்ட் லெக்கில் நிற்க முடியவில்லை. அவரால் இந்திய அணிக்கு எந்த பங்களிப்பையும் ஆஸ்திரேலியா தொடரில் செய்ய முடியவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் சுப்மன் கில் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.