மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 30 பந்துகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டாலே, அவர்களால் ஃபார்மை மீட்டெடுக்க முடியும் என்று துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் சாம் கோன்ஸ்டாஸ் ஆட்டம் எங்களை கொஞ்சம் பின்னுக்கு இழுத்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் அறிமுக வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்களை விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு அரைசதம் விளாசியதால், மிடில் ஆர்டரில் வந்த லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். இதனால் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலி தேவையில்லாமல் சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் மோதி ஸ்லெட்ஜிங் செய்தது ஆஸ்திரேலியா மீடியாக்களுக்கு சரியான தீனியாக அமைந்துள்ளது.
இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி மன உறுதியை சேதப்படுத்த அனைத்து விஷயங்களையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் குறித்து இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசுகையில், என்னை பொறுத்தவரை வீரர்களின் நம்பிக்கையும், அவர்கள் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார்கள் என்பதும் தான் ஆட்டத்தை நிர்ணயிக்கும்.
ஒரு வீரருக்கு நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால், அவர்களின் ஆட்டமே வேறு மாதிரி இருக்கும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அப்படியான வீரர்கள் தான். அவர்களால் 25 முதல் 30 பந்துகளை மட்டும் அவர்கள் எதிர்கொண்டுவிட்டால், நம்மால் பழைய விராட் கோலியையும், ரோஹித் சர்மாவையும் பார்க்க முடியும். எவ்வளவு பயிற்சி செய்கிறோம், எவ்வளவு பேசுகிறோம் என்பதெல்லாம் விஷயமே அல்ல.
கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிவிட்டால் 25 முதல் 20 பந்துகளை விளையாட வேண்டும். அதேபோல் அறிமுகப் போட்டியிலேயே அதிரடியாக அரைசதம் விளாசிய கோன்ஸ்டாஸை பாராட்ட வேண்டும். அவரின் அதிரடியாக ஆட்டம் எங்களை பின்னுக்கு தள்ளியது. அவரின் ஆட்டத்தால் இந்திய பவுலர்கள் தங்களின் திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட சில சவால்கள் ஏற்பட்டது. இந்த பிட்ச் பவுலிங் செய்வதற்கு எளிதாக இருக்கவில்லை. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் தான். இதுபோன்ற தருணங்களில் தான் திட்டங்களை கைவிடாமல் பவுலிங் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.