மெக்காய் : இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஏ அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது.
இதில் ஆஸ்திரேலியாவின் மெக்காய் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணியும், ஆஸ்திரேலியா ஏ அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் ருதுராஜ் முதல் பந்தலில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் 7 ரன்களில் வெளியேற தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எனினும் அவரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சாய் சுதர்சன் 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நடு வரிசையில் களமிறங்கிய டேவுதட் படிக்கல் மட்டும் நிதானமாக ஆடி 77 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தமிழக வீரரான பாபா இந்திரஜித் ஒன்பது ரன்களில் வெளியேற அதிரடி வீரர் இசான் கிஷன் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார், இறுதியில் நவதீப் சைனி போராடி 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய ஏ அணி 47.4 ஓவரில் 107 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய ஏ அணி பந்துவீச்சு தரப்பில் பிராண்டன் டக்கட் என்ற வேகப்பந்துவீச்சாளர் 11 ஓவர் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜான் பக்கிங்கம் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 107 ரன்களில் இந்திய ஏ அணி ஆட்டமிழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய ஏ அணியில் நவதிப் சைனி, பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் என்ற மூன்று வேக பந்துவீச்சாளர்களும் நிதிஷ்குமார் ரெட்டி என்ற ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும் மனாவ் சுதார் என்ற சுழற் பந்துவீச்சாளரும் இருக்கிறார்கள்.