மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 20 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடருக்கும் பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரெட் பாலில் கிரிக்கெட்டில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்கள் பலரும் சொதப்பி வரும் சூழலில், இளம் வீரர்களை தயார் செய்ய பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ பிசிசிஐ தீவிரமாக தயார் செய்து வந்தது. ஏற்கனவே துலீப் டிராபியில் இந்தியா சி அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், இராணி கோப்பைத் தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் தலைமை தாங்கினார்.
இதனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வெளியேறினால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. அதேபோல் மிடில் ஆர்டரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் என்பதால், நம்பர் 4ல் களமிறங்கவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி பங்கேற்றுள்ளது.
இதற்கு இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டால், பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக கொண்டு வரப்படவும் வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் முதல் டெஸ்ட் போட்டியில் 0, 5 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் 4 மற்றும் 11 ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். மொத்தமாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடியுள்ள 4 இன்னிங்ஸ்களில் 20 ரன்களை மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் விளாசி இருக்கிறார். இவரை விடவும் சாய் சுதர்சன், துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்கள் தரமாக விளையாடி இருக்கின்றனர்.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்களை எவ்வளவு எளிதாக விளையாடுகிறாரோ, அதே அளவிற்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள விரைவில் தயாராக வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.