கான்பூர்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 413 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 83 பந்துகளில் 110 ரன்களையும், இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா 84 பந்துகளில் 101 ரன்களாஇயும் விளாசி அசத்தினர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா ஏ அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி கான்பூர் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வில் சதர்லேண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 53 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 56 ரன்களை குவித்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். மறுபக்கம் அதிரடியில் பொளந்து கட்டிய பிரியன்ஷ் ஆர்யா 83 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 84 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 101 ரன்களை விளாசி வெளியேறினார்.
இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் - ரியான் பராக் இணை கூட்டணி அமைத்தது. இருவரும் 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரியான் பராக் 42 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். மறுபக்கம் பவுண்டரி மழையை பொழிந்து கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 75 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 83 பந்துகளில் 4 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 110 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் வந்த ஆயுஷ் பதோனியின் 27 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட அரைசதம் விளாசி தள்ளினார். இதனால் இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 413 ரன்களை குவித்துள்ளது.
அண்மையில் ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஓய்வு கேட்டிருந்தார். அதற்கு பிசிசிஐ அனுமதி அளித்திருந்த நிலையில், முழு கவனத்தையும் ஒயிட் பால் கிரிக்கெட் பக்கம் திருப்பி இருக்கிறார். அதன் பலனையும் ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக அறுவடை செய்து வருவதாக பார்க்கப்படுகிறது. விரைவில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.