பெர்த்: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய இரண்டு மாற்று வீரர்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு அளிக்காமல் அவரை ஆஸ்திரேலியாவில் இருந்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய அணி நிர்வாகம் திருப்பி அனுப்பி இருக்கிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகளில் விளையாடியது. அதன் பின் இந்திய அணியுடனும் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியது. அந்த அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி போட்டியில் சாய் சுதர்ஷன் ஆடினார். அப்போது ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் அடித்து இருந்தார்.

இதற்கிடையே இந்திய அணியில் துவக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா முதல் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மூன்றாம் வரிசையில் களமிறங்கும் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முதல் மூன்று பேட்டிங் வரிசையில் இரண்டு மாற்று வீரர்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இந்திய அணி நிர்வாகம் அதற்காக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்ஷான் ஆகிய மூவரில் ஒருவரை துவக்க வீரராகவோ அல்லது மூன்றாம் வரிசையிலோ ஆட வைக்கவும், மற்றொரு மாற்று வீரராக கே எல் ராகுலை ஆட வைக்கவும் திட்டமிட்டு இருந்தது.

சாய் சுதர்ஷன் இதற்கு முன் பல்வேறு முக்கிய போட்டிகளில் ரன் குவித்து தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடினமான நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து இருந்தார்.
அதன் பின் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்ற அவர் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடினார். அப்போது மூன்று போட்டிகளில் 127 ரன்கள் எடுத்தார். இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தார். அவரது சராசரி 63.50 ஆக இருந்தது. அடுத்து இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் தொடரில் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்கு எதிராக 105 ரன்கள் அடித்து இருந்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 103 ரன்கள் அடித்து இருந்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்திய எமர்ஜிங் அணிகளுக்கான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அழுத்தம் நிறைந்த போட்டியில் சதம் அடித்து இருந்தார்.
இப்படி பல்வேறு நாடுகளிலும், அழுத்தம் நிறைந்த போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன் குவித்து இருக்கும் சாய் சுதர்ஷனுக்கு, ஆஸ்திரேலியாவில் கடும் சவாலான சூழ்நிலையில் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். இந்திய அணியில் தேவை இருந்தும் சாய் சுதர்ஷனுக்கு பதிலாக தேவ்தத் படிக்கலை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தேர்வு செய்து இருக்கிறார்.