மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் புதன்கிழமை கென்பேரா நகரில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடைசியாக 2020-21 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை 11 டி20 போட்டிகள் விளையாடி உள்ள இந்திய அணி 7 ஆட்டங்களில் வென்று உள்ளது. இந்த தருணத்தில் இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் பார்த்தீவ் பட்டேல், எந்தெந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம்.
தொடக்க வீரர்களாக அபிசேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்க வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பையில் கடந்த 7 போட்டிகளில் 314 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 200 ஆகும். கில், தன்னுடைய திறமையை டி20 தொடரில் வெளி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மூன்றாவது வீரராக திலக் வர்மா விளையாட வேண்டும் என பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார்.
6 இன்னிங்ஸில் ஆசியக் கோப்பையில் மொத்தமாக 213 ரன்கள் திலக் வர்மா எடுத்தார். நான்காவது வீரராக கேப்டன் சூரியகுமார் யாதவ் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல் ஐந்தாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆறாவது வீரராக ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலும், ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் சிவம் துபேவும் இடம்பெற வேண்டும் என பார்த்தீவ் பட்டேல் குறிப்பிட்டுள்ளார். எட்டாவது வீரராக நிதிஷ் குமார் ரெட்டியும், ஒன்பதாவது வீரராக பும்ரா பத்தாவது வீரராக வருண் சக்கரவர்த்தி 11-வது வீரராக ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் விளையாட வேண்டும் என பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.