பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மாவின் கம்பேக் போட்டி, சுப்மன் கில் தலைமையில் முதல் ஒருநாள் போட்டி என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். அவரது முடிவு நூற்றுக்கு நூறு சரியானது என்பதை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் நிரூபித்தனர்.
ரோஹித் 8 ரன்கள் எடுத்தும், கோலி டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில், ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் சுப்மன் கில்லும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து பெய்த மழையால், ஆட்டம் பலமுறை தடைபட்டது. இதனால், இந்திய பேட்ஸ்மேன்களால் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஹேசில்வுட், தனது 7 ஓவர்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய பேட்டிங் வரிசையை காலி செய்தார். கே.எல். ராகுல் (38), அக்சர் படேல் (31) மற்றும் அறிமுக வீரர் நிதிஷ் குமார் ரெட்டியின் (19*) கடைசி நேரப் போராட்டத்தால், இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது.
டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி, ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிகவும் நேர்த்தியாக விரட்டினர். டிராவிஸ் ஹெட் (8), மேத்யூ ஷார்ட் (8) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தாலும், கேப்டன் மிட்செல் மார்ஷ், தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்தார். முதல் 10 ஓவர்களில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசிய அவர், பின்னர் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவருக்கு ஜோஷ் பிலிப் (37), 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியில், மாட் ரென்ஷாவுடன் (21*) இணைந்து, மிட்செல் மார்ஷ் (46* ஆட்டமிழக்காமல்) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவர்களிலேயே, அதாவது 29 பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.