மும்பை: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மோத இருந்த பயிற்சிப் போட்டியை பிசிசிஐ ரத்து செய்து இருக்கிறது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் இந்த போட்டியில் ஆட மறுப்பு தெரிவித்ததோடு, இந்தப் போட்டியில் ஆடுவதை விட வலைப் பயிற்சியே போதுமானது என தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக நவம்பர் 12ஆம் தேதி அன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சிப் போட்டியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த முறையும் அது போல பயிற்சி போட்டியில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது. எப்போதும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சிப் போட்டியில் விளையாடும். ஆனால், இதற்கு முந்தைய சில தொடர்களின் போது ஒரு சர்வதேச போட்டி அனுபவம் கூட இல்லாத உள்ளூர் வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியை மட்டுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு இந்திய அணிக்கு எதிராக ஆட வைக்கும்.
இதன் மூலம், அந்த பயிற்சி போட்டி எந்த வகையிலும் இந்திய வீரர்களுக்கு பயன் தராத வகையில் அமையும். எனவே, இந்த முறை அதற்கு பதிலாக இந்தியா ஏ அணியுடன், இந்திய டெஸ்ட் அணி விளையாடும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நவம்பர் மூன்றாவது வாரத்தில் இந்திய அணியுடன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி பயிற்சிப் போட்டியில் விளையாட இருந்தது. அதனால், ருதுராஜ் கெய்க்வாட் அணியுடன், ரோஹித் சர்மா அணி மோத உள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், இந்த போட்டியை விட வலைப் பயிற்சியே சிறந்தது என இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் மூத்த வீரர்கள் கூறி விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டிக்கு முன்னதாக அதே மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாட இருந்தனர்.
தற்போது அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டு, அந்த மைதானத்தின் நடு பிட்ச்சில் இந்திய அணி வலைப் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. "வலைப் பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்யலாம். ஆனால், பயிற்சி போட்டியில் நீண்ட நேரம் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காது." என இந்திய அணியின் மூத்த வீரர்கள் கூறியதால் பிசிசிஐ இந்தியா ஏ அணியுடனான போட்டியை ரத்து செய்து இருக்கிறது.