
வெளிநாட்டு டெஸ்ட் தொடர்
இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்து வருகிறது. 2018-19இல் மட்டுமே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மண்ணில் ஆடிய டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்து இருந்தது.

ஸ்விங் பந்துவீச்சு
இந்த நாடுகளில் ஸ்விங் பந்துவீச்சுக்கு ஆடுகளங்கள் அதிகம் ஒத்துழைக்கும். ஸ்விங் பந்துவீச்சில் எப்படி ஆட வேண்டும் என தெரியாமலே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். அதே விஷயம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் நடந்துள்ளது.

புதிய பந்து
டெஸ்ட் போட்டிகளில் புதிய பந்தில் தான் பந்து அதிகம் ஸ்விங் ஆகும். அப்போது தான் விக்கெட்களும் வேகமாக கிடைக்கும். முதல் இன்னிங்க்ஸில் அதை பயன்படுத்தி இந்திய அணியின் துவக்க வீரர்கள் இருவரின் விக்கெட்களை மட்டுமே ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

மொத்தமாக காலி
இரண்டாம் இன்னிங்க்ஸில் மூன்றாம் நாள் காலையில் முதல் 10 ஓவர்களில் ஸ்விங் பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என மொத்தமாக அனைவரையும் காலி செய்தது ஆஸ்திரேலிய அணி.

தடுப்பாட்டம்
ஸ்விங் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் எந்த விஷயத்தில் திணறுகின்றனர் என்பது பற்றி முன்னாள் வீரர்கள் பலர் கூறி உள்ளனர். ஸ்விங் பந்துவீச்சில் கால்களை நகர்த்தி ஆட வேண்டும். தடுப்பாட்டம் ஆடினால் கூட பந்தின் திசைக்கு ஏற்ப கால்களை நகர்த்தி ஆட வேண்டும்.

அனுபவ வீரர்கள்
ஆனால், ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் உள்ளிட்ட இளம் வீரர்கள் மட்டுமின்றி, ரஹானே, புஜாரா போன்ற அனுபவ வீரர்களும் இரண்டாம் இன்னிங்க்ஸில் அதே தவறை செய்தனர். அதுதான் விக்கெட்கள் விரைவாக விழ காரணம்.

விமர்சனம்
இது பற்றி மீண்டும் விமர்சனம் எழுந்துள்ளது. சில ஓவர்கள் தாக்குப் பிடித்து நிலைத்து நின்று இருந்தால் கூட அதன் பின் ஸ்விங் செய்ய முடியாமல் ஆஸ்திரேலியா வேறு முறையில் பந்துவீச்சை மாற்றி இருக்கக் கூடும். ஆனால், அதற்குள் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து விட்டது.


Click it and Unblock the Notifications