மும்பை: இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் 15 முதல் 20 ஓவர்களில் அதிகளவிலான ஷாட்களை விளையாடியதே கொத்தாக விக்கெட் வீழ்ந்ததற்கு காரணம் என்று சீனியர் வீரரான புஜாரா தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு வீசப்பட்ட லைன் சிக்கலானது என்று கூறியுள்ள புஜாரா, வரும் நாட்களில் பயிற்சி மூலம் அவ்வகையான பந்துகளுக்கு பதிலை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியை மொத்தமாக இந்திய அணி காலி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடிலெய்டு மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

இதற்கு இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது. அதிலும் புதிய பந்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது முன்னாள் வீரர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுகுறித்து இந்திய அனுபவ வீரர் புஜாரா பேசுகையில், இந்திய அணியின் பேட்டிங்கில் பாசிட்டிவ் மோகம் அதிகமாக உள்ளதாக நினைக்கிறேன்.
பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஒரு எச்சரிக்கை இருந்து கொண்டே இருந்தது. அனைத்து பந்துகளிலும் ரன்கள் சேர்க்க தேவையில்லை என்ற தெளிவு இருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் முதல் 20 ஓவர்களுக்குள் ஏராளமான ஷாட்களை இந்திய வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். தொடர்ந்து ஷாட்களை விளையாடும் போது பவுலர்கள் மீது அழுத்தம் ஏற்படும் என்பது உண்மை தான்.
ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சூழலுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணி பவுலர்களுக்கு எந்த பிட்ச் மற்றும் லெந்தில் பவுலிங் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். இந்திய அணியின் சரிவுக்கு ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் ஸ்டம்ப் லைனில் பந்துவீசவில்லை.
அதேபோல் ஃபுல்லர் லெந்திலும் பவுலிங் செய்யவில்லை. அதனை இன்று ஆஸ்திரேலியா வீரர்கள் சரியாக புரிந்து செயல்பட்டுள்ளனர். ஆஃப் ஸ்டம்ப்-க்கு மேலாகவும், அதிர்ச்சியளிக்கும் வகையில் சில பவுன்சர்களையும் தொடர்ந்து வீசியது பலனளித்துள்ளது. விராட் கோலியை பொறுத்தவரை அவர் ஆட்டமிழந்த பந்து பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலானது தான்.
ஏனென்றால் அந்த லைன் மற்றும் லெந்தில் வீசும் போது பேட்ஸ்மேன்களை நோக்கி வருவது போலவும், திடீரென விலகுவது போலவும் தோன்றும். விராட் கோலி அவரின் ஆட்டத்தை நன்றாக அறிந்தவர். அதிலும் ஆஸ்திரேலியா பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிவார். ஆனால் சமீப காலங்களில் அதிகளவில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி வருகிறார்.
அடுத்தப் போட்டிக்கு முன்பாக விராட் கோலி அது மாதிரியான பந்துகளை எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கி கொள்ளவேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாகவே விராட் கோலி பதிலை கண்டறிய முடியும். ஏனென்றால் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதற்கு இனி ஆஸ்திரேலியா பவுலர்களின் திட்டம் இதுவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.