மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டி20 போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் கைவசம் விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வருண் அரோன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அதிக அளவு விக்கெட்டுகளை பவர் பிளேவில் பறி கொடுத்ததால் தோல்வி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இரண்டாவது t20 போட்டியில் நாம் மிகவும் மோசமாக விளையாடினோம். நாம் எடுத்த ஸ்கோர் போதுமானதாக கிடையாது. இன்னும் ஒரு 30 முதல் 40 ரன்கள் கூட அடித்திருந்தால் நிச்சயம். இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்று இருக்கலாம்.

கடைசி கட்டத்தில் நாம் விக்கெட்டுகளை எடுத்து நெருக்கடி ஏற்படுத்தினோம். ஆனால் போதுமான ரன்கள் இல்லை என்பதால் நம் அணியால் வெற்றி பெற முடியவில்லை. புதிய பந்தை இந்திய அணி வீரர்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். பும்ரா சிறப்பாகவே பந்து வீசி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஆனால் அதன்பின் வீசிய மற்ற பவுலர்கள் ரன்களை வாரி குவித்தார்கள். ஹர்சித் அதிக அளவு ஷார்ட் பால்களை பயன்படுத்தினால் அது ரன்களாக மாறியது. இதுபோன்ற மைதானங்களில் பந்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி வீரர்கள் சார்ட் பார்ட் வீச ஆசைப்படுவார்கள். ஆனால் ஹேசல்வுட், இந்த ஆடுகளத்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து சிறப்பாக அனைவருக்கும் காட்டி இருக்கிறார்.
ஹேசல்வுட் போன்ற வீரர்கள் பந்து வீசும் போது நிச்சயமாக நாம் சில விக்கெட்டுகளை பறிகொடுப்போம். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் பந்துகளை வீசி நெருக்கடி தருவார். அதுவும் பந்தை நன்றாக வேகமாக வீசுவார். இதன் காரணமாக நாம் கைவசம் சில விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு பின்னர் அதிரடி காட்ட வேண்டும்.
அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் கொஞ்சம் அவருக்குத் துணை நின்று இருக்க வேண்டும். போட்டியை கடைசிவரை நின்று விளையாடுங்கள். கைவசம் விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு இறுதிக்கட்டத்தில் ரன்களை அடியுங்கள். அப்போதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.