மும்பை: இந்திய அணி வீரர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்து போராட்ட குணத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார். ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இருவரும் தேவையான நேரத்தில் பெரிய ஷாட்களை விளையாடியும், ரன்கள் ஓடியும் ஃபாலோ ஆனை தவிர்த்துவிட்டதாக கூறியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் எப்படி பும்ரா - முகமது ஷமி இணைந்து வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்களோ, அதேபோல் காபா மைதானத்தில் பும்ரா - ஆகாஷ் தீப் இணைந்து புதிய வரலாற்றை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன் கொடுத்து இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று தீவிரமாக இருந்தது.

ஆனால் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் பும்ரா - ஆகாஷ் தீப் இணைந்து 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர். இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்ததோடு, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களை சேர்த்துள்ளது. இதனால் 5வது நாளில் இந்திய அணி பேட்டிங்கை தொடரும் என்பதால், இனி ஆஸ்திரேலியா அணி அசாத்தியத்தை நிகழ்ச்சியே வெற்றியை பற்றி சிந்திக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளதால், மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் என்று இரு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். 2 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணியை ஆல் அவுட் செய்வது கடினமாக விஷயம். இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் பேசுகையில், ஃபாலோ ஆனை தவிர்த்தது மிக முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்படவில்லை என்றால், இந்திய அணியை மீண்டும் ஆல் அவுட் செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலியா அணி செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கும். ஹேசல்வுட் இல்லாமல் இந்திய அணியை ஆல் அவுட் செய்ய முடியாது என்றாலும், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரின் செயல்பாடுகள் மிரள வைத்துள்ளது. தோல்வியை ஏற்க மாட்டோம் என்று இருவரும் பிடிவாதமாக இருந்தனர்.
அவர்களின் ஆட்டத்தில் நல்ல டிஃபென்ஸ் மற்றும் தேவையான நேரத்தில் பெரிய ஷாட்களும் இருந்தது. 1,2 என்று ரன்கள் எடுத்த போதும் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் இந்திய அணியின் குணத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. நீங்கள் நினைப்பது போல் தோல்வியை எளிதாக ஏற்க மாட்டோம் என்று நிரூபித்துள்ளனர். இன்றைய நாளில் இரு வீரர்களும் முழு கட்டுபாட்டுடன் பேட்டிங் ஆடினார்கள்.
அதேபோல் ஆகாஷ் தீப்பின் சாதனையை மறக்க கூடாது. ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட்டில் 18 பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் அவர். கம்மின்ஸ் வீசிய கட்டர் பந்தில் பவுண்டரியை விளாசியதோடு, அடுத்த 2 பந்துகளில் சிக்சரும் விளாசி தனது பலத்தை காட்டியுள்ளார். அவரால் பெரிய சிக்சர்களை அடிக்க முடியும். ஆர்சிபி அணியுடன் பணியாற்றிய போது அருகில் இருந்து பார்த்துள்ளேன். அதனை வெளிப்படுத்தும் வகையில் அந்த சிக்சர் அடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.