சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு பின் பார்டர் கவாஸ்கர் டிராபி வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது. பிஜிடி தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதன் மூலமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது.
தொடர்ச்சியாக 2 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஆடிய இந்திய அணி, இம்முறை பிஜிடி தொடரிலும் தோல்வியடைந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் விரக்தியில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், ஓய்வறையில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நான் நேர்மையாக இருக்க வேண்டும். அதனால் அனைத்து வீரர்களும் உடனடியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் எதிர்காலம் குறித்த என்னால் எந்த கருத்தும் கூற முடியாது. அவர்களிடம் வெற்றிக்கான பசியும், பொறுப்பும் இருக்கிறது. நிச்சயம் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதனை எடுப்பார்கள். இந்திய அணி வீரர்கள் மாற்றம் பெறுவது குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
ஏனென்றால் அடுத்த 5 மாதங்களில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்திய அணி தோல்வியடைந்த போட்டிகளில் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்புவதற்கான சூழல் அமைந்தது. ஒருவேளை மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அழுத்தத்தை கட்டுப்படுத்தி இருந்தால், இந்தப் போட்டியில் வீரர்கள் மீதான அழுத்தம் குறைந்திருக்கும்.
சிட்னி டெஸ்ட் போட்டியிலும் 2வது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். அதேபோல் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மூன்றிலும் இந்திய அணி முன்னேற்றமடைய வேண்டும். இந்திய டெஸ்ட் அணிக்காக அடுத்த பயணத்தை தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. அடுத்து வரும் காலங்களில் நிச்சயம் ஏராளமான விஷயங்கள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் என்ன நடந்தாலும், அது இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக மட்டுமே நடக்கும். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதனால் அதற்கேற்ப முடிவுகள் கிடைத்துள்ளது. அதனை நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை பும்ரா அற்புதமாக செயல்பட்டார். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ் மற்றும் ஹர்சித் ராணா இருவரும் இருந்தனர் என்று கருதுகிறேன்.
அதேபோல் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அதற்காக தான் முக்கியமான உள்ளூர் போட்டிகளில் விளையாட இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதில் விளையாடவில்லை என்றால், தேவையான வீரர்களை கண்டறிவது சிரமமாக இருக்கும். அதனால் யாரெல்லாம் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்களோ, அவர்கள் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.