சிட்னி: ஐபிஎல் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை அருகில் இருந்து கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அவரை எப்படி வீழ்த்த முடியும் என்பதை கண்டறிந்ததாக இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் இடையிலான யுத்தத்தை காண்பதற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு பயணித்த போது அஸ்வின் வேறு லெவனில் பவுலிங் செய்து அசத்தினார்.

ஒரு கட்டத்தில் அஸ்வின் பவுலிங் செய்வதாக நினைத்து ஸ்டீவ் ஸ்மித் மைதானத்திலேயே ஷேடோ பயிற்சி மேற்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிலும் லெக் ஸ்டம்ப் லைனில் ஆஸ்திரேலியா அணி வீரர்களை அடுத்தடுத்து அஸ்வின் வீழ்த்தியது இன்று வரை பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. இதனால் இம்முறை அஸ்வினின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ஸ்பின்னர்களை விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் பேட்ஸ்மேன்களில் ஸ்டீவ் ஸ்மித் முக்கியமானவர். வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள அவர் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு வருகிறார். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிரான நிச்சயம் புதிய திட்டங்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
அதற்காக தயாராகுவதோடு, செயல்படுத்தவும் தீவிரமாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை வீழ்த்துவதற்கு சில வழிமுறைகளை கண்டறிந்துள்ளேன். டெல்லி அணி மற்றும் புனே அணிக்காக நாங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். அப்போது அவர் வலைப்பயிற்சி எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறேன். எப்படி தயாராகிறார் என்பதை பார்த்திருக்கிறேன்.
அப்போது அவருக்கு தொல்லைக் கொடுக்கும் பந்துகள், பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் குறித்து அறிந்து கொண்டேன். ஸ்டீவ் ஸ்மித் அதிகமாக சிந்தனை செய்யக் கூடியவர். ஒவ்வொரு முறையும் பவுலர்களை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்று விரும்புவார். பயிற்சியே சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கும்.
அதனை அருகில் இருந்து பார்த்து வாய்ப்பு கிடைத்ததால், அவரை வீழ்த்த முடியுமா, முடியாதா என்பதை தெரிந்து கொண்டேன். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தை பார்க்கும் போது சில நேரங்களில் என்னை பார்ப்பது போலவே இருக்கும். தொடர்ச்சியாக அவரை கண்காணித்ததன் மூலமாக அவருக்கு சிக்கலை கொடுக்கும் பந்துகளை வீச முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.