சிட்னி: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் சர்ஃபராஸ் கான் பயிற்சியின் போது முழங்கையில் அடிபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நவ.22ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியுடன் ரோஹித் சர்மா பயணிக்கவில்லை.

தனது 2வது குழந்தையை வரவேற்பதற்காக மனைவி ரித்திகாவுடன் இருந்து வருகிறார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரிட் பும்ரா இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். அதேபோல் விராட் கோலி உடனிருப்பதால், கடந்த முறையை போல் இம்முறை இந்தியா வெற்றி பெறும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கதவுகள் மூடப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், பிசிசிஐ தரப்பில் தொடர்ச்சியாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் தரப்பில் இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கானின் பயிற்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சர்ஃபராஸ் கான் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட போது முழங்கையில் காயமடைந்தது தெரிய வந்துள்ளது. நெட் பவுலர் ஒருவர் வீசிய பந்தில் கூடுதல் பவுன்ஸை எதிர்பார்க்காத சர்ஃபராஸ் கான், முழங்கையில் அடி வாங்கி இருக்கிறார்.
இதன்பின் உடனடியாக சர்ஃபராஸ் கானை பிசியோதெரபிஸ்ட் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சர்ஃபராஸ் கானுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஏற்கனவே ரோஹித் சர்மா இல்லாததால், கேஎல் ராகுல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் இருவரில் ஒருவர் தொடக்கம் கொடுக்கவுள்ளனர்.
இதனால் மிடில் ஆர்டரில் களமிறங்கி வரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் துருவ் ஜுரெல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் பெர்த் டெஸ்ட் போட்டியிலேயே துருவ் ஜுரெல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.