மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கு 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணியோடு மூன்று ரிசர்வ் வீரர்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
ரிசர்வ் வீரர்கள் : முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் விளையாட மாட்டார் என முன்பு தகவல் வெளியான நிலையில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவரே தற்காலிக கேப்டனாகவும் செயல்படுவார் என தெரிகிறது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருடன் பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நிதிஷ் குமார் ஆல் ரவுண்டராக செயல்படக்கூடியவர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்ட மயங்க் யாதவ் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு காயம் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாத கே எல் ராகுல் நீக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. முகமது ஷமி முழு உடற்தகுதி பெறாத காரணத்தால் தேர்வு செய்யப்படவில்லை.