சிட்னி: சவுரவ் கங்குலி முதல் சேவாக் வரை எப்படி இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி வெளியேற்றி இளம் வீரர்களை கொண்டு வந்தாரோ, அதே ஸ்டைலை இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பின்பற்றி வருவதாக பார்க்கப்படுகிறது. அஸ்வினை தொடர்ந்து அடுத்ததாக ரோஹித் சர்மா பக்கம் கம்பீர் திரும்பி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமனம் செய்யப்பட்ட போது, அவர் முன் நின்ற மிகப்பெரிய சவால் ஜாம்பவான் வீரர்களை கையாள்வது தான். அதேபோல் வயதாகி கொண்டே வந்ததால், ஃபீல்டிங் சொதப்பல் காரணமாக முதலில் ஒருநாள் அணியில் இருந்து சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோரை நீக்கினார்.

அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கங்குலி, அனில் கும்ப்ளே ஆகியோர் ஓய்வை அறிவிக்க, பின்னர் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோரை உரிய மரியாதையுடன் அனுப்பி வைத்தார். இதற்கிடையே ஒருநாள் அணியில் இளம் வீரர்களை தயார் செய்து உடனடியாக அவர்களை டெஸ்ட் அணிக்கு கொண்டு வந்து இடத்தை நிரப்பினார் தோனி.
சச்சின் டெண்டுல்கர் மட்டும் நல்ல ஃபார்மில் இருந்ததோடு, விளம்பர வருவாய் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் கடைசி வரை ஆடினார். தோனியின் இந்த ஸ்டைலை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஜாம்பவான் வீரர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்று அவரது ரசிகர்களும் விளாசி வந்தனர்.
தற்போது தோனியின் ஸ்டைலையே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பின்பற்றி வருவதாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே அஸ்வினின் இடத்தை நிரப்பக் கூடிய வலுவான வீரராக வாஷிங்டன் சுந்தர் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சுந்தர் முன்னிலைப்படுத்த நிலையில், அஸ்வின் ஓய்வை அறிவித்து வெளியேறினார்.
தற்போது 38 வயதை எட்டப் போகும் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மின்றி தவித்து வருகிறார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஹித் சர்மாவை பெஞ்ச் செய்ய முடியாமல், சுப்மன் கில் போன்ற இளம் வீரரை கம்பீர் பெஞ்ச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் பிஜிடி டெஸ்ட் தொடர் பின்னடைவால், ரோஹித் சர்மா கடைசி டெஸ்டில் இருந்து விலகியதாக தெரிகிறது.
அவரது இடத்தில் விளையாட பல்வேறு வீரர்கள் தயாராக இருக்கும் நிலையில், பிசிசிஐ தரப்பிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் மூலமாக ரோஹித் சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பும்ரா வசம் டெஸ்ட் கேப்டன்சியை கொடுக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இதனால் ரோஹித் சர்மா அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் சீனியர் வீரர்களை மொத்தமாக ஒதுக்காமல் சச்சினை எப்படி தோனி கடைசி வரை விளையாட வைத்தாரோ, அதேபோல் விராட் கோலியை கையாள இந்திய அணி முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.விராட் கோலி இந்திய அணியில் தொடர்வதால் வரும் விளம்பர வருவாய் மற்றும் அவரின் பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியிடம் இருப்பதி டெக்னிக்கல் பிரச்சனை என்பதால், அதனை சரி செய்யவும் வாய்ப்பு வழங்க கம்பீர் நினைத்திருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகள் மற்றும் சொந்த மண்ணில் விராட் கோலி அளவிற்கு அனுபவம் உள்ள வீரர் இந்திய அணிக்கு தேவையாக உள்ளார். கேப்டன்சி மற்றும் இளம் வீரர்கள் வழிகாட்டும் வகையில் விராட் கோலியை பயன்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.