மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி நாளை சனிக்கிழமை பிரிஸ்பேன் நகரில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், சூரியகுமார் யாதவ் பார்மில் இல்லை என்று சொன்னால் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றும் கம்பீரையும் அவர் மறைமுகமாக சாடி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முன்பெல்லாம் சூரியகுமார் பேட்டிங் வரிசையில் நம்பர் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து விளையாடி வந்தார். ஆனால் தற்போது பாருங்கள் அவருடைய இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது.

அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் எந்த இடத்தில் விளையாடினாலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. எப்போதுமே ஒரு அணியின் கேப்டன் ரன்கள் எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் சூரிய குமார், இந்த ரன் வறட்சி அவருடைய கேப்டன்சியை பாதிக்கவில்லை என்பதை அவருடைய செயல்பாடுகளை பார்த்தாலே தெரிகிறது.
கிரிக்கெட்டில் போதுமான ரன்கள் இல்லை மற்றும் ஃபார்ம் அவுட் என இரண்டு விஷயங்கள் இருக்கிறது. தற்போது சூரிய குமாருக்கு ஏற்பட்டிருப்பது போதுமான ரன்கள் இல்லை என்பதுதான். அவர் பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் கூட தடுமாற்றத்தை எதிர்கொள்ளவில்லை. அவ்வளவு எண் மோசமான ஆடுகளங்களில் கூட அவர் தடுமாறாமல் அதிரடியாகவே விளையாடுகிறார்.
அவருக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் மட்டும் அமைந்தால் போதும், அனைத்துமே மாறிவிடும்.
இந்திய டி20 அணியில் நம்பர் மூன்றாவது இடத்தில் யார் விளையாடுவார்கள். இன்னும் அதற்கான பதிலை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். முதல் மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் சூரிய குமார் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தார். இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனும், நான்காவது டி20 போட்டியில் சிவம் துபேவும் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.