பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மழைக்கு நடுவே நடைபெற்று வரும் இந்த மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைய நிறைய வாய்ப்பு உள்ளதாக அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், மழையால் டிரா ஆகப் போகும் போட்டியில் கூட தோல்வி அடைவது எப்படி? என காட்டுவதற்காக இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து உள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து விட்ட நிலையில் இந்தப் போட்டியில் மழைக்கு நடுவே வெல்வது கடினம் தான்.

ரன் எடுக்கவே வேண்டாம், நிதானமாக பேட்டிங் ஆடினாலே போட்டி டிரா ஆகி விடும் என்ற நிலை உள்ளது. அப்படி இருந்தும் இந்திய பேட்ஸ்மேன்கள் போட்டியை வெல்லப் போவது போல ஷாட்களை ஆடி கேட்ச் கொடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இந்தப் போட்டியின் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டத்தில் 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இரண்டாவது நாள் ஆட்டம் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மூன்றாம் நாள் அன்று பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது.
இரண்டரை நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்வது எளிது என்ற கருத்து விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில் அதுவே சிறந்த யோசனையாகவும் இருந்தது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வெட்ட வெளிச்சமானது. முதல் போட்டியிலும் கூட முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி டிராவை நோக்கி ஆடாமல் விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடியது.
அதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருக்கிறது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்தும், சுப்மன் கில் ஒரு ரன் எடுத்தும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்தும் ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்தும் வரிசையாக ஆட்டம் இழந்தனர். யார் குறைவான ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்கிறார் என்பதில் ஒரு போட்டி இருந்தது. 1 ரன்னில் ஆட்டமிழந்து சுப்மன் கில் அதில் வெற்றி பெற்றார்.
இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட நிதானமாக ஆட வேண்டும், டிராவை நோக்கி ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடவில்லை. விராட் கோலி வழக்கம் போல ஆஃப் சைடு வந்த பந்தை அடிக்க முயற்சித்தார். அதனால், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஷாட் ஆட ஆசைப்பட்டு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ளன. அதில் பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள ஓவர்களில் இந்திய அணி டிராவை நோக்கி ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாகவும் உள்ளது.