மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கே எல் ராகுலை துவக்க வீரராக ஆட வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. ஆனால், அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தவறு எனக் கூறி இருக்கிறார்.
கே.எல் ராகுல் சரியாக ஆடாத நிலையில் அவரை எப்படியாவது இந்திய அணியில் விளையாட வைத்து விட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா அடங்கிய இந்திய அணி நிர்வாகம் நினைப்பதாகவும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் பதற்றத்தில் இந்த முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியது - "இந்திய அணி பதற்றத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி அதிர்ந்து போய் இருக்கிறது. அதனால் தான் இந்திய அணியின் திட்டங்கள் கந்தரகோலமாக மாறி வருகிறது."
"ஆனால், இங்கேதான் நாம் வேறு விதமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே, இப்போதுதான் இந்திய அணி சரியான விஷயத்தை செய்ய முயற்சிக்க வேண்டும். இந்திய அணியில் தகுதியான வீரர்களை ஆட வைக்க வேண்டும். கே எல் ராகுல் மீது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒருவித விருப்பம் இருக்கிறது. அவரை எப்படியாவது பிளேயிங் லெவனில் ஆட வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்."
"டாப் ஆர்டரோ, மிடில் ஆர்டரோ எதிலோ ஒன்றில் ராகுலை ஆட வைக்க முயற்சி நடக்கிறது. ஒருவேளை மாற்று துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணி நிர்வாகத்தை திருப்திப்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஆனால், நாம் கடவுளாக மாறி அபிமன்யு ஈஸ்வரன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்க மாட்டார் என சொல்ல முடியாது."
"கடந்த காலத்தில் இது போன்ற பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். தகுதியான இடத்தை அடைந்தால் சிலர் ஆச்சரியமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள். எனவே, எளிமையான முடிவை, சரியான தேர்வை செய்ய வேண்டும். கே எல் ராகுல் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்று நான் சொல்வேன். அவருக்கு கிடைத்தது போல வாய்ப்புகள், காயங்களுக்கு பின்பு மீண்டும் அணியில் இடம் ஆகியவை இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வேறு எந்த வீரருக்கும் கிடைத்தது இல்லை."
"அவர் பேட்டிங் வரிசையில், மேல் வரிசையோ, கீழ் வரிசையோ எப்படியோ இடம் பெற்று வந்தாலும் மோசமான ரெக்கார்டை வைத்துக் கொண்டு இருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 50 போட்டிகளுக்கு பின் 33 என்பதாக சரிவை சந்தித்து இருக்கிறது. ஆனால், எங்கேயாவது கே எல் ராகுல் தனது ஃபார்மை மீட்பார் என இந்திய அணி நம்புகிறது."
"அவர் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து இருக்கிறார். அதனால் தான் அவரை மீண்டும் மீண்டும் இந்திய அணியின் திட்டத்தில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால், இப்போது அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ஜெய்ஸ்வாலை துவக்க வீரர்களாக ஆட வைப்பதற்கான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அது இந்திய அணி நிர்வாகத்திற்கு அதிக நம்பிக்கையை அளிக்கவில்லை. ஆனாலும், அது தான் சரியான விஷயம்." என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.