மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஸ்கார் போலண்ட்-ஐ போலவே பவுலிங் செய்யக் கூடிய ஒருவரை எதிர்த்து விளையாடி, இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி 2 முறை விக்கெட்டை கொடுத்திருப்பதால், கூடுதல் நேரம் பயிற்சி மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால், 5 நாட்களில் குறைந்தது மெல்போர்ன் மைதானத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனென்றால் இந்த டெஸ்ட் போட்டியில் வெல்லும் பட்சத்தில், பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் தோல்வியை தவிர்க்க முடியும். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை இந்த ஆட்டத்தில் இரு மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
அதேபோல் தொடக்க வீரர் மெக்ஸ்வீனி ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாம் கோன்ஸ்டஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் கோன்ஸ்டஸ்-ன் ஆட்டத்தை விடவும், ஸ்காட் போலண்ட்-ன் இந்திய அணிக்கு சிக்கலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பகலிரவு டெஸ்ட் போட்டியிலேயே ஸ்காட் போலண்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் தோல்விக்கு போலண்ட்-ன் பவுலிங் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் இவரின் லைன் மற்றும் லெந்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், போலண்ட்-ன் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களால் ரன்கள் சேர்ப்பது கடினமான விஷயமாகும். இதனை இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே இந்திய அணியின் பயிற்சியின் போது போலண்ட்-ஐ சமாளிக்க புதிய திட்டத்தை இந்திய அணி அரங்கேற்றியுள்ளது. ஸ்காட் போலண்ட்-ஐ போலவே பவுலிங் செய்யக் கூடிய ஒருவரை வைத்து இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக விராட் கோலி அவரின் பவுலிங்கில் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
இதன் மூலமாக போலண்ட்-ஐ எதிர்கொள்ள இந்திய வீரர்கள் சிறப்பாக தயாராகியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இப்படிதான் அஸ்வினை கட்டுப்படுத்த அஸ்வினை போலவே பவுலிங் ஆக்ஷன் உள்ள பரோடாவைச் சேர்ந்த மகேஷ் பிதியாவை வைத்து பயிற்சி மேற்கொண்டு தயாராகினர். தற்போது ஆஸ்திரேலியா அணியின் பாலிசியை இந்திய அணி பின்பற்றுவதாக பார்க்கப்படுகிறது.