மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தி இருக்கிறார். அதற்காக ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரில் ஒருவரை நீக்கியோ அல்லது வாஷிங்டன் சுந்தர் இடத்திலோ சேர்க்கலாம் என்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை காலை தொடங்க உள்ளது. அடிலெய்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் ஃபேவரைட் மைதானம் என்பதோடு, இந்திய அணி விளையாடிய 15 போட்டிகளில் 9ல் வென்றுள்ளது.

அதேபோல் இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், ஒருநாள் தொடரை இழக்கும். இதனால் கட்டாயமாக இந்திய அணி வெல்ல வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.
அதில் இர்பான் பதான் பேசுகையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை எப்படி கொண்டு வரப் போகிறோம்? என்னை பொறுத்தவரை குல்தீப் யாதவை இந்திய அணிக்குள் கொண்டு வருவதற்கு 3 வாய்ப்புகள் உள்ளது. முதல் வாய்ப்பாக வாஷிங்டன் சுந்தரின் இடத்தில் குல்தீப் யாதவை கொண்டு வரலாம்.
அப்படியில்லை என்றால், 3 வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்கலாம். இந்த வகையில் மாற்றம் செய்தால், இந்திய அணியில் நம்பர் 8 வரை பேட்டிங் வரிசை இருக்கும். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டியை 3வது வேகப்பந்துவீச்சாளராக களமிறக்க வேண்டிய சூழல் வரும்.
அதேபோல் குல்தீப் யாதவ் இந்திய அணியின் பவுலிங்கில் முக்கியமான ஆயுதம். பெர்த் மைதானத்தில் ஸ்பின்னர்கள் விக்கெட்டை வீழ்த்தினார்கள். எந்த உதவியும் இல்லாமல், ஸ்பின்னர்களால் விக்கெட்டை வீழ்த்திட முடிந்திருக்காது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீண்ட ஓய்வில் இருந்ததால், இந்திய அணியால் 5 பவுலர்களுடன் களமிறங்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.