மும்பை: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி டி20 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, தனது அச்சமற்ற அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ளும் அவரது ஆட்டம், ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
ஆனால், அவரது இந்த ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், அபிஷேக்கிற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அபிஷேக் சர்மா , பொதுவாகப் பந்துவீச்சாளருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், தான் சந்திக்கும் முதல் பந்திலேயே களத்தை விட்டு இறங்கி வந்து அடிக்க முயற்சிப்பார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த யுக்தியை ஓரளவிற்கு கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இர்ஃபான் பதான், அபிஷேக்கின் இந்த குறிப்பிட்ட ஆட்ட பாணி குறித்து எச்சரித்துள்ளார். "அபிஷேக் அச்சமின்றி விளையாடுவது மிகச் சிறந்த விஷயம். ஆனால், நாம் விளையாடும் பெரும்பாலான தொடர்கள் இருதரப்புத் தொடர்கள்தான், உலகக் கோப்பை அல்ல."
"உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில், அணிகள் மிகுந்த தயாரிப்புடனும், திட்டங்களுடனும் களமிறங்கும். அபிஷேக் ஒவ்வொரு பந்தையும் இறங்கி வந்து ஆடினால், எதிரணிகள் அதற்கெனப் பிரத்யேகமாகத் திட்டமிடுவார்கள். எனவே, அபிஷேக் எந்தப் பந்தை அடிப்பது, எதை விடுவது என்பதைத் தேர்வு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பதான் குறிப்பிட்டார்.
மேலும், "அணி நிர்வாகம் நிச்சயம் இதைக் கவனித்து வருகிறது என்று நான் நம்புகிறேன். அவரது பயிற்சியாளரான யுவராஜ் சிங் இதைக் கவனிப்பார். இதுகுறித்து நான் பின்னர் யுவியிடம் பேசுவேன். அபிஷேக் சர்மாவும் இதை நிச்சயம் உணர்ந்திருப்பார். ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் இறங்கி வந்து அடிக்க முடியாது" என்று பதான் தெரிவித்தார்.
பிரிஸ்பேனில் மழையால் கைவிடப்பட்ட ஐந்தாவது டி20 போட்டியில், அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். அந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டு எளிதான கேட்ச்களைத் தவறவிட்டதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார். இதையும் சுட்டிக்காட்டிய பதான், அதிக ரிஸ்க் எடுத்து ஆடுவதில் தவறில்லை, ஆனால் அதற்கும் ஒரு வியூகம் தேவை என்றார்.
"இன்றைய போட்டியில் அவருக்கு இரண்டு முறை கேட்ச் தவறவிடப்பட்டது. அதில் ஒன்று பிடிக்கப்பட்டிருந்தால் கூட, அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருக்கும். அவர் தொடர்ந்து அதிக ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும், ஆனால் அந்த அச்சமின்மையிலும் ஒரு பகுத்தறிவு வேண்டும். அங்கே ஒரு முறையான திட்டமிடல் அவசியம்" என்று பதான் அறிவுறுத்தினார்.
"ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ், தனது வேகத்தை மாற்றி வீசுவதன் மூலம் அபிஷேக்கிற்கு நெருக்கடி கொடுத்தார். இதைக் கவனித்த மற்ற அணிகளும் இனி அபிஷேக்கிற்கு எதிராக இதே போன்ற யுக்திகளைக் கையாள்வார்கள்" என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, 40.75 என்ற சராசரியுடனும், 176.34 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 163 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.