மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெறும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
ஆசிய கோப்பையில் இடம் பெற்ற வீரர்கள் டாப் ஆறு பேர் அப்படியே ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அணி அக்சர் பட்டேல் மற்றும் சிவம் துபே என இரண்டு விதமான ஆல்ரவுண்டர்களையும் பயன்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பந்துவீச்சில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக இர்பான் பதான் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஹர்ஷித் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் மீது பெரிய நம்பிக்கை இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கும்.
அக்சர் பட்டேல், சிவம்துபே என இரண்டு ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பதால் நம்பர் 7 வரை பேட்டிங் வரிசையில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆர்ஸ்தீப் மற்றும் சிவம்துபே இருவரும் இணைந்து குறைந்தபட்சம் ஆறு ஓவர்கள் வரை வீச வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக ஆர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா உள்ளிட்ட இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம்.
இதன் காரணமாக உங்களின் தனித்துவ சுழற் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் வருண் சக்கரவர்த்தியை பயன்படுத்துவேன். பவர் பிளேவில் குறைந்தபட்சம் இரண்டு ஓவர்கள் ஆவது வருண் சக்கரவர்த்தி வீசுவார். ஒருவேளை மேஜிக்கை நிகழ்த்தக்கூடிய சுழற் பந்துவீச்சாளர் வேண்டுமென்றால், குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி t20 போட்டிகளில் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எனவே இந்த தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று இர்பான் பதான் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 12 போட்டிகளில் இந்தியா விளையாடி வெறும் நான்கு போட்டிகள் மட்டும் தான் தோல்வியை தழுவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.