மும்பை: இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது இந்திய அணி. அதற்கு முன்னதாக இந்தியா ஏ அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆடி வருகிறது.
இந்த இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய வீரர்கள் மீது பந்தை சேதப்படுத்தியதாக மறைமுகமாக அம்பயர் ஷான் கிரைக் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தது.

அதனால் இந்த முறை டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே இந்திய அணிக்கு அழுத்தம் தரும் நோக்கத்தில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அம்பயர் எழுப்பி இருப்பதாக இந்திய ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா பந்தை இந்திய வீரர்கள் சேதப்படுத்தவில்லை என விளக்கம் அளித்து இருந்தாலும் ஸ்டம்ப் மைக் மூலம் இந்திய வீரர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதை போன்ற ஒரு பிம்பத்தை அம்பயர் மூலம் கட்டமைக்கும் வேலை இது என இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் அம்பயர் புதிய பந்தை அளித்திருந்தார். அது ஏன்? என இந்திய வீரர்கள் கேள்வி கேட்டபோது, "பந்தை நீங்கள் சுரண்டியதால் அதை மாற்றி இருக்கிறோம். இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள்." என்றார் அம்பயர் ஷான் கிரைக்.
"இந்த முடிவு முட்டாள்தனமானது" என இஷான் கிஷன் சொன்னதற்கு அவர் மீது புகார் அளிக்க இருப்பதாகவும், ஷான் கிரைக் எச்சரித்து இருந்தார். எனினும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அம்பயர் பந்தை சேதப்படுத்தியதாக சொன்னதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி இருக்கிறது. மேலும், பந்து மோசமான நிலையில் இருந்ததால் புதிய பந்தை தேர்வு செய்ததாகவும் விளக்கம் அளித்து இருக்கிறது.
அம்பயர் ஷான் கிரைக் இந்த காரணத்தை சொல்லாமல் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வெளி உலகுக்கும் மறைமுகமாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள், இந்திய வீரர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதன் மூலம் திட்டமிட்டு இந்திய அணிக்கு அழுத்தம் அளிக்கப்பட்டு இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.