பெர்த்: எந்த சூழ்நிலையிலும் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ நினைக்கிறதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் அவருக்கு டெஸ்ட் போட்டியில் கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறார். சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. கே எல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு பயிற்சியின் போது லேசான காயம் ஏற்பட்டது.

எனினும், அவர்கள் இருவரும் பயிற்சிப் போட்டியில் தொடர்ந்து பேட்டிங் செய்தார்கள். ஆனாலும், அதில் ரன் சேர்க்கவில்லை. இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்லுக்கு மாற்றாக யாரை ஆட வைப்பது என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இந்தியா ஏ அணியில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாலில் முகாமிட்டு உள்ளனர்.
அவர்கள் இருவரில் ஒருவரை முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆடிய பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ரன் சேர்த்து இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், அதே பயிற்சிப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே மற்ற பேட்ஸ்மேன்களை விட அதிக நேரம் தாக்குப் பிடித்து ஆடியதாகவும் தகவல் வெளியானது. டாப் ஆர்டரில் ஆட மாற்று வீரர்கள் தேவை எனும் நிலையில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.
உள்ளூர் போட்டிகளில் ருதுராஜ் துவக்க வீரராக ஆடுபவர் எனும் நிலையில் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அவரை தேர்வு செய்திருக்க முடியும். அவர் மூன்றாம் வரிசையிலும் விளையாடி ரன் குவித்து இருக்கிறார் என்பதால் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஆடவும் அவரை தேர்வு செய்து இருக்க முடியும்.
ஆனால், ருதுராஜுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஏற்கனவே, டி20 அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ரன் சேர்த்திருந்தும், சிறப்பான தலைமை பண்பு உடையவர் என்பதற்காக இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
அப்படி இருந்தும் ருதுராஜுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இதுவரை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் ருதுராஜின் தலைமைப் பண்புதான் பெரிய பிரச்சனையாக உள்ளது என சிலர் கூறுகின்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில ஆண்டுகளில் இருக்கிறார். அவர் அடுத்த ஆண்டு இந்திய அணியிலிருந்து ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது சுப்மன் கில் மற்றும் பும்ரா ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக ஆடினால் அவர்களை முந்தி அவர் கேப்டன் ஆகும் வாய்ப்பு ஏற்படும்.
அதனை தவிர்க்கவே அவரை அணியில் தேர்வு செய்வதில்லை என கூறப்படுகிறது. ருதுராஜின் தலைமைப் பண்பை முன்பே அடையாளம் கண்ட தோனி, 2020 ஆம் ஆண்டு முதல் ருதுராஜை படிப்படியாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவிக்கு தயார் செய்தார். 2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.