மெல்போர்ன்: பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று மூன்றிலும் இந்திய அணி சிறந்த செயல்பாடுகளை என்னிடம் எதிர்பார்ப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். 2வது நாளில் சில பின்னடைவை சந்தித்தாலும், நாளைய ஆட்டத்தில் கம்பேக் கொடுப்போம் என்றும் உறுதி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திண்டாடி வருகிறது. 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியிருந்த போது, ஜெய்ஸ்வாலின் ரன் அவுட் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்ததால், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது.

இதனால் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி ரிஷப் பண்ட், ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 வீரர்களின் பேட்டிங்கை நம்பியே உள்ளது. ஃபாலோ ஆனை தவிர்க்க மீண்டும் போராட வேண்டிய சூழல் வருமா என்ற ரசிகர்களும் பீதியில் இருக்கின்றனர். அதேபோல் வானிலையிலும் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் நிச்சயம் மீதமுள்ள 3 நாட்களும் ஆட்டம் தொடரும் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்திய அணி எதிர்பார்ப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதேபோல் இந்திய அணிக்கு என்ன தேவையோ, அதனையும் களத்தில் செய்து முடிக்க வேண்டும்.
களத்தில் என்ன மாதிரியான சூழல் இருந்தாலும் சரி.. சிறந்த எனர்ஜியுடன் அணிக்கு தேவையானதை செய்து முடிக்க முயற்சிப்பேன். இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிப்பதற்கான இடத்தில் இருக்கிறது. பின்னடைவை சந்தித்திருந்தாலும், நாளைய ஆட்டத்தில் நிச்சயம் கம்பேக் கொடுப்போம். ஓய்வறையில் உள்ள எனர்ஜி நன்றாக இருக்கிறது. இந்த ஆட்டம் முடிவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இன்னும் 3 நாட்களும், ஏராளமான ஓவர்களும் வீச வேண்டி இருப்பதால், இந்திய அணி வெல்வதற்கு தேவையான வகையில் செயல்பாடுகள் இருக்கும். நேற்றைய ஆட்டத்தின் போது சூரிய வெளிச்சம் முழுமையாக வெளி வருவதற்கு கொஞ்சம் தாமதமானது. அதன் காரணமாகவே நான் பவுலிங் செய்ய தாமதமாக கொண்டு வரப்பட்டேன் என்று நினைக்கிறேன். நாளைய ஆட்டத்தின் போது பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைப்பதாக கூறியுள்ளார்.