துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடுவது உதவியாக இருப்பதாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒப்புக் கொண்டுள்ளார். பிட்சின் தன்மை மற்றும் செயல்பாடு குறித்து கண்டறிந்துள்ளதால், அதற்கேற்ப பவுலிங் செய்வதாக கூறிய அவர், துபாய் மைதானத்திலேயே அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு சாதகம்தான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதனிடையே இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற போது, மாற்று அணிகளின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினர். இந்திய அணி துபாய் மைதானத்தில் ஆடுவதால், அந்த அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது.

ஐசிசி பாரபட்சமாக இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது என்று விமர்சித்தனர். இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இந்திய அணியின் பயிற்சி கூட துபாய் மைதானத்தில் நடப்பதில்லை என்று கூறிய அவர், ஐசிசிக்கு சொந்தமான மைதானத்திலேயே வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் துபாய் மைதானத்தில் ஆடுவதால் தங்களுக்கு சில சாதகம் இருப்பதாக நட்சத்திர வீரர் முகமது ஷமி ஒப்புக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் முகமது ஷமி பேசுகையில், என்னுடைய ரிதத்தை பிடிக்க முயற்சித்து வருகிறேன். இந்திய அணியின் வேறு முதல் நிலை வேகப்பந்துவீச்சாளர் இல்லாததால், கூடுதல் பொறுப்பை தோளில் சுமக்க வேண்டிய தேவை உள்ளது.
மற்றொரு பவுலர் ஆல்ரவுண்டராக இருக்கும் போது, எனது பணி அதிகமாகி இருக்கிறது. விக்கெட்டுகளும் எடுக்க வேண்டும், அதேபோல் ரன்களையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கிறேன். எனது பணி மற்ற பவுலர்களுக்கு பணியை எளிதாக்குவதுதான். அதற்கு 100% உழைப்பை கொடுத்து வருகிறேன்.
தற்போது என்னால் பெரிய ஸ்பெல்லையும் வீச முடியும். 2 ஓவர்கள் என்றாலும், 6 ஓவர்கள் என்றாலும் எளிதாக வீச முடியும். அதேபோல் ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவது நிச்சயம் உதவியாக இருக்கிறது. ஏனென்றால் இந்த பிட்சின் தன்மை மற்றும் எப்படி செயல்படும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே மைதானத்தில் ஆடுவது நிச்சயம் சாதகமானதுதான்.
ஆனால் இங்குள்ள சூழல் மற்றும் பிட்ச் எப்படி செயல்படும் என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டமிடுவது முக்கியம். நாங்கள் ஒரே மைதானத்தில் ஆடுவதால், அதனை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முகமது ஷமி ஒப்புக் கொண்டிருப்பது மற்ற நாடுகளின் நிர்வாகிகளின் வாதத்திற்கு கூடுதல் உதவியாக அமைந்துள்ளது.