இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் துவக்கத்தில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் தவிர யாரும் சொல்லிக் கொள்ளும் படி ஆடவில்லை. ராகுல் 51 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் கைவிட்ட நிலையில் ஜடேஜா கடைசி நேரத்தில் கை கொடுத்தார்.
அதிர வைத்த ஜடேஜா
ஜடேஜா கடைசி இரு ஓவர்களில் பவுண்டரிக்களாக அடித்து அதிர வைத்தார். அவர் 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இதை அடுத்து இந்திய அணி 161 ரன்கள் குவித்தது. ஜடேஜா 19வது ஓவரில் பேட்டிங் செய்து வந்த போது அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
முதல் உதவி
அப்போது மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதித்தனர். அவருக்கு சில பயிற்சிகள் அளித்து முதல் உதவி சிகிச்சை செய்தனர். அப்போதே ஜடேஜாவால் போட்டியில் பந்துவீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாததால் இது பெரிய கேள்வியாக இருந்தது.
யாரும் வரவில்லை
இந்த நிலையில், 20வது ஓவரில் ஜடேஜா ஹெல்மட்டில் பந்து தாக்கியது. ஆனால், அப்போது இந்திய அணி மருத்துவர்களோ, பிசியோதெரபிஸ்ட்டோ வந்து பரிசோதனை செய்யவில்லை. ஐசிசியின் புதிய விதிப்படி ஹெல்மட்டில் பந்து தாக்கினால் அந்த வீரர் நிலையாக இருக்கிறாரா? எம பரிசோதனை செய்ய வேண்டும்.
எந்த சோதனையும் நடக்கவில்லை
ஆனால், அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை. ஜடேஜா மீதமிருந்த பந்துகளை சந்தித்தார். அதன் பின் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் இன்னிங்க்ஸ் துவங்கும் முன் ஜடேஜா ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் மூளை அழற்சி ஏற்பட்டு இருக்கலாம் என்பதால் அவருக்கு பதில் சாஹல் அணியில் சேர்க்கப்பட்டார்.
சர்ச்சை
இதில் இரண்டு விஷயம் சர்ச்சையாக மாறியது. முதலில் ஜடேஜாவுக்கு ஹெல்மட்டில் பந்து தாக்கிய போதே மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்யாதது ஏன்? அப்படி என்றால் ஐசிசி விதிமீறல் நடந்துள்ளது என்பது முதல் சர்ச்சையாகும்.
மாற்று வீரர்
அடுத்ததாக மாற்று வீரரை தேர்வு செய்யும் போது காயத்தால் விலகும் வீரருக்கு இணையான வீரரையே தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர். அவருக்கு பதில் முழுநேர சுழற் பந்துவீச்சாளரான சாஹல் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இதுதான் காரணமா?
இதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ஜடேஜாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் பந்து வீச முடியாது. அதை சமாளிக்கவே ஹெல்மட்டில் பந்து தாக்கியதை காரணமாக வைத்து சாஹலை இறக்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு எழுந்தது.
பதற்றம்
இந்த நிலையில், இடைவேளையின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இது குறித்து மேட்ச் ரெப்ரீ டேவிட் பூன்-உடன் வாக்குவாதம் செய்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.
ஆட்டநாயகன் சாஹல்
இந்தப் போட்டியில் மாற்று வீரர் சாஹல் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். அவருக்கே ஆட்டநாயகன் விருதும் அளிக்கப்பட்டது. முதன்முறையாக டி20 போட்டியில் மாற்று வீரர் ஒருவர் ஆட்டநாயகன் விருது வென்றதும் பரபரப்பாக பேசப்பட்டது.