ராய்ப்பூர் : டி20 தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறார் ஆஸ்திரேலிய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டாப்.
டி20 போட்டிகளில் கூட மெய்டன் ஓவர் வீசும் அவரை சமாளிக்க எந்த வழியும் இல்லாமல் இந்திய அணி தவித்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியும் அவரை வைத்தே தங்களின் பவுலிங் திட்டத்தை செயல்படுத்தி இந்திய அணிக்கு கடும் அழுத்தம் கொடுக்க உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளையும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியையும் வென்றுள்ளன. இந்த நிலையில், நான்காவது போட்டியில் இந்தியா வென்றால் தொடரைக் கைப்பற்றி விடும் என்பதால் ஆஸ்திரேலியா நிச்சயம் பெரிய திட்டத்துடன் தான் ஆடும். அந்த திட்டத்தின் முக்கிய அங்கமாக ஜேசன் பெஹ்ரண்டாப் தான் இருப்பார்.

அவர் முதல் போட்டி மற்றும் மூன்றாவது போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். அவர் பந்து வீசிய அந்த இரண்டு போட்டியிலும் தலா ஒரு மெய்டன் ஓவர் வீசி இருக்கிறார். முதல் போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா 200 ரன்களுக்கும் அதிகமாகவே ரன் குவித்தது. அப்படி என்றால் இவரது ஓவர்களிலும் இந்திய அணி ரன் குவித்து இருந்தால் கூடுதலாக 15 - 20 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும். பெஹ்ரண்டாப் குறிப்பாக இன்னிங்க்ஸின் பவர்பிளேவில் தான் மெய்டன் ஓவர் வீசுகிறார். இந்திய அணியின் மூன்றாம் வரிசையில் இறங்கும் இஷான் கிஷன் தான் அவர் ஓவரில் ரன் எடுக்காமல் அந்த ஓவர்களை மெய்டனாக மாற்றி வருகிறார்.
அவர் மட்டுமின்றி பிற வீரர்களும் இவரது ஓவர்களை ரன் குவிக்க திணறுகின்றனர். இந்த நிலையில், நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா நிச்சயம் பெஹ்ரண்டாப் ஓவருக்கு பின் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்களை வீசச் செய்து இந்திய பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய வைக்க திட்டமிடும். அதற்கு முன்னதாக இந்திய அணி பெஹ்ரண்டாப் ஓவரில் ரன் குவிக்கும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் நான்காவது போட்டியை வெல்வது கடினமாக மாறி விடும்.